திமுக மகளிரணி சார்பில் ஜனவரி 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” டெல்டா மண்டல மகளிரணி மாநாடு வரும் ஜனவரி 26ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட – கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் முன்னிலையில், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி , எம்.பி. தலைமையில்; வருகிற ஜனவரி-19 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு 26.01.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெறும். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
