மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஜூன் 12 ஆம் தேதி 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 82.34 அடியாக குறைந்தது.
அத்துடன் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
நேற்று (ஜூலை 9) காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 104 கன அடியாக குறைந்தது.
அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையிலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் அணையின் நீர் இருப்பும் நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி குறைந்து வருகிறது. நேற்று மேட்டூர் அணையின் நீர் இருப்பு 44.32 டிஎம்சி மட்டுமே இருந்தது.
மேட்டூர் அணையில் உள்ள மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் திட்டங்களுக்காகவும் அணையில் 9.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையில் மீதமுள்ள தண்ணீர் 35 நாள் பாசனத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதன் பிறகு பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தாலும் அங்குள்ள அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மைசூரு, குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ராம் நகர் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குடகு பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறி பாய்ந்து ஓடியது.
இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் மொத்தம் 789 கன அடி திறந்துவிடப்பட்டுள்ள நீர் திறப்பால், பிலிக்குண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
ராஜ்
