தன்னுடன் லிவிங் டூ கெதரில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய கொடூர நிகழ்வு டெல்லியில் அரங்கேறியுள்ளது.
26 வயதான ஷ்ரத்தா என்ற இளம் பெண் மும்பையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் கால் சென்டரில் பணியாற்றி வந்தார். மும்பையில் இருந்தபோதே அப்தாப் புனேவாலா என்பவருடன் டேட்டிங்கில் இருந்துள்ளார்.
முதலில் இருவரும் நண்பர்களாகப் பழகி பின்னர் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர். இவர்களது உறவுக்கு ஷ்ரத்தா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் டெல்லி வந்து அங்கு ஒரே வீட்டில் தங்கி வசித்து வந்தனர்.
டெல்லியில் மெஹருளி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி ஒன்றில் தங்கியிருந்தனர்.
டெல்லியிலும் ஷ்ரத்தா, நிறுவனம் ஒன்றில் பணியாற்ற அப்தாப் சமையல்காரராக பணியாற்றி வந்துள்ளார்.
இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தச்சூழலில் அப்தாப் தன்னை நம்பி வந்து ஒரே வீட்டில் தங்கிய ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதை விட கொடூரமாக ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ப்ரிட்ஜ் வாங்கி வந்து அதில் வைத்துள்ளார்.
தினசரி ஏதேனும் ஒரு இடத்திற்குச் சென்று அதை புதைத்துவிட்டோ அல்லது தூக்கி எறிந்துவிட்டோ வந்துள்ளார். மெஹருளி காட்டுப்பகுதி உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உடல் துண்டுகளை வீசியுள்ளார்.
அதுவும் பகல் நேரத்தில் சென்றால் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காகச் சம்பவம் நடந்த அடுத்த 18 நாட்களுக்குத் தினசரி அதிகாலை 2 மணிக்கு எடுத்துச் சென்று உடலை வீசி வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் கடந்த மே 18 ஆம் தேதி அரங்கேறியுள்ளது. ஆனால் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காரணம், எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஷ்ரத்தாவின் சமூக வலைதளத்தில் எந்த அப்டேட் தகவலும் சில மாதங்களாக இடம்பெறவில்லை. அவரை போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஷ்ரத்தாவின் தந்தை விகாஷ், பல்கர் (மகாராஷ்டிரா ) பகுதியிலிருந்து டெல்லியில் இருவரும் வசித்து வந்த குடியிருப்புக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அங்கு வீடு பூட்டப்பட்டிருந்ததால் மேலும் சந்தேகம் அதிகரிக்க மெஹருளி காவல் நிலையத்தில் தனது மகளை அப்தாப் கடத்திவிட்டதாகக் கடந்த நவம்பர் 8ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்தாப்பை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அப்தாப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்துச் சண்டையிட்டு வந்ததால் கொலை செய்தேன் என விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார் அப்தாப்.
இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுபோன்று மெஹருளி காட்டுப்பகுதியிலிருந்து சில உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
பதை பதைக்க வைக்கும் இந்த கொலையைச் செய்த அப்தாப்பும், ஷ்ரத்தாவும் ஒரு டேட்டிங் ஆப் மூலம் சந்தித்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை தெற்கு டெல்லி ஏடிசிபி அங்கித் சவுகான் கூறியுள்ளார்.
பிரியா
இந்த அணி பேட்டிங்கில் சொதப்பியதற்கு இதுதான் காரணம்! – கவாஸ்கர்