பிரதமர் குறித்து ஆவணப்படம் வெளியிட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பிபிசி நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மே 22) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்றும் முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் பேசு பொருளான நிலையில் மத்திய அரசு பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் தடையை மீறி பிபிசி ஆவணப்படத்தை பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு திரையிட்டனர்.
இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் மற்றும் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது என்.ஜி.ஓ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “ஆவணப்படத்தின் இரண்டு பகுதிகளும் நீதித்துறை மற்றும் நாட்டை அவமதிக்கிறது” என்று வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதி, அவதூறு வழக்கு தொடர்பாக பிபிசி நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மோனிஷா
அதிமுக பேரணியால் போக்குவரத்து நெரிசல்
ரூ.2000 நோட்டு மாற்றம்: முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிய ரிசர்வ் வங்கி!
