ரூ.2000… மனுவைத் தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்!

Published On:

| By christopher

2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது வரை ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவிகிதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறுவதாக மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன்படி ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றியும், டெபாசிட் செய்யப்பட்டும் வருகிறது. இதற்கான கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க முடியும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சதிஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மனுவுக்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம் என கூறியது. இந்த வழக்கு விசாரணை கடந்த மே 30ஆம் தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ரூ.2,000 நோட்டுகள் திரும்பப்பெறும் விவகாரம் தொடர்பாக தற்போது வரை ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவிகிதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் 76 சதவிகிதம் வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் 13 சதவிகிதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி  தரப்பில் கூறப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு: நாளை தீர்ப்பு!

கிச்சன் கீர்த்தனா: ஸ்பெஷல் தயிர் சாதம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share