வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் இன்று (ஜூன் 4) புகாரளித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெறுவதாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, “பிற்பகல் 2.30 மணிக்கு பிறகு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தகவல்களை பதிவேற்ற வேண்டும். ஆனால், அதனை பதிவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக பல மாநிலங்களில் இருந்து கட்சி தலைமைக்கு புகார் வந்தது.
இதனையடுத்து, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்ற வேண்டும். அதில் எந்தவித தாமதமும் ஏற்படக்கூடாது என மனு அளித்துள்ளோம்.
நாங்கள் எந்தவித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. தேர்தல் ஆணையம் எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…