லைகா நிறுவனம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டு சவுக்கு சங்கர் சம்பாதித்த வருவாயை டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டி சவுக்கு சங்கர் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சவுக்கு சங்கரிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கோரியும், அவர் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு நிரந்தரத் தடை கோரியும் மூத்த வழக்கறிஞர் வி ராகவாச்சாரி மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி என் சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் வி ராகவாச்சாரி, “இந்த மாத தொடக்கத்தில், சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் லைகா நிறுவனத்திற்கு எதிராக பல அவதூறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அத்தகைய வீடியோக்கள் 6,34,000 முறை பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது. அவை நிறுவனத்தின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன” என்று அவர் வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி சதீஸ்குமார், யூடியூபர்களுக்கு மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உரிமம் இல்லை என்றும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மீது மேலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் முன்வைக்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, லைகா தயாரிப்பு நிறுவனம் குறித்து வெளியிட்ட வீடியோ மூலம் சவுக்கு சங்கர் சம்பாதித்த மொத்த வருவாயையும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு யூடியூப் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெறுப்புப் பேச்சு : தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்… மன்னிப்பு கேட்ட மத்திய பாஜக அமைச்சர்!
Comments are closed.