நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் குறித்து அவதூறு பரப்பியவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் கூறினார். Defamation against Napoleon son
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் தசை குறைபாடுடைய நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டார். எனினும் நலமாக இருந்து வருகிறார்.
கடந்த மாதம் நவம்பரில் தனுஷுக்கும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
அப்போது முதல் தனுஷ் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்தன.
அவரால் எப்படி திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியும், பணத்துக்காக இப்படி செய்யலாமா என்று விவாதங்களும் நடந்தன.
இந்த சூழலில் தனுஷ் உடல்நலம் குறித்து சமீப நாட்களாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்தவாறு தன்மகன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடிகர் நெப்போலியன் புகார் அளித்துள்ளார்.
அவர் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை சார்பில் மயோபதி மருத்துவமனை மருத்துவர் டேனியல் ராஜா மற்றும் நெப்போலியனின் சகோதரர் கிருபாகரன் சார்பில் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதில் தனுஷ் மீது அவதூறு பரப்புவர்களை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனுஷ் தொடர்பான பதிவுகளை இணையத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக நாம் திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசனிடம் விசாரித்த போது, “சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில்நுட்ப உதவியுடன் இந்த வீடியோ எங்கிருந்து வெளி வந்தது என விசாரித்து வருகின்றனர். தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. விரைவில் யார் அந்த தகவல்களை பரப்புகிறார்கள். எந்த நோக்கத்துக்காக பரப்புகிறார்கள் என கண்டுபிடித்துவிடுவோம். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். Defamation against Napoleon son
