பதான் படத்தில் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்ற பாடலுக்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் நடித்த பேஷ்ரம் ரங் என்ற பாடல் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியானது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று (டிசம்பர் 14 )பேசிய அவர், பாடலில் காணப்பட்ட பிகினி உடை மிகவும் ஆட்சேபனைக்குரியது. மேலும் இந்த பாடல் அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

காட்சிகள் மற்றும் அவரது உடைகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் இந்த படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்து மகா சபை தலைவர் சக்ரபாணி மகராஜ் இந்த படத்திற்கு தடை விதிக்கிறோம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ஷாருக்கானின் பதான் படத்தில் காவி மற்றும் இந்து சமஸ்கிருத அவமதிப்பு உள்ளது. திரைப்பட தணிக்கை வாரியம் ஏன் தூங்குகிறது? தடை விதிக்கிறோம்! இந்து மகாசபா எதிர்க்கும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்