சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் மகள் உள்ளார்.
47 வயதான இவரது தந்தை தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் அந்தச் சிறுமி கர்ப்பமானார்.
இந்த தகவல் வெளியே தெரிந்த நிலையில், வக்கிரபுத்தி கொண்ட அந்த தந்தை மீது நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது நாங்குநேரி பகுதி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பிரசன்ன குமார் தலைமையிலான குழுவினர் வழக்கை தீவிரமாக முன்னெடுத்தனர். தற்போது பிரசன்ன குமார் திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக இருக்கிறார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வழிகாட்டுதல் படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு சார்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி, பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதங்களை முன் வைத்தார்.
ஏழு மாதம் தொடர்விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது நீதிபதி, பெற்ற மகளையே பாதுகாக்க முடியவில்லை. மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தை இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மிகப்பெரிய சமூகக் கொடூரம் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறுமியின் தந்தையான குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அதோடு 25,000 அவர் அபராதம் செலுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
குற்றம் நடந்த 7 மாதங்களில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கும் விசாரணை அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த தீர்ப்பு குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
