ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு வட்டி விகிதத்தில் எந்த இழப்பும் ஏற்படாது என்றும், 2022 மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை வரவு வைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தையும் மத்திய நிதியமைச்சகம் நேற்று (அக்டோபர் 5) நள்ளிரவில் தெளிவுபடுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த மோகன் தாஸ் என்பவர் தனது பிஎஃப் கணக்கில் 2022 மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டுக்கான வட்டி வரவு வைக்கப்படவில்லை என்பதை அறிந்து அது தொடர்பாக, “டியர் இபிஎஃப்ஓ…. எங்கே என் வட்டி? சீர்திருத்தங்கள் தேவைதான்.
அதேநேரம் உங்களின் நிர்வாகத் திறனின்மைக்கு நாங்கள் பாதிக்கப்பட வேண்டுமா?’ ஒரு ட்விட் பதிவிட்டு அதை பிரதமர் மோடி, நிதியமைச்சர், நிதியமைச்சகம் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
நேற்று மாலை அவர் இந்த ட்விட்டை இட்ட நிலையில் அது அரசு மற்றும் தனியார் ஊழியர்களிடையே வைரலாக பரவியது. அரசின் பிஎஃப் நிறுவனம் ஊழியர்களின் வட்டிப் பணத்தை என்ன செய்கிறது என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் மோகன் தாஸின் கேள்விக்கு நேற்று இரவு 11.05 மணிக்கு நிதியமைச்சக ட்விட்டர் கணக்கில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
“எந்த சந்தாதாரருக்கும் வட்டி இழப்பு இல்லை. அனைத்து EPF சந்தாதாரர்களின் கணக்குகளிலும் வட்டி வரவு வைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், வரி நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிடுவதற்காக EPFO ஆல் செயல்படுத்தப்படும் மென்பொருள் மேம்படுத்தும் (சாஃப்ட்வேர் அப்கிரேட்) நடவடிக்கையின் காரணமாக வட்டி வரவு வைக்கப்பட்டது ஸ்டேட்மென்ட்டுகளில் காட்டப்படவில்லை.
செட்டில்மென்ட் கோரும் மற்றும் வெளிச்செல்லும் சந்தாதாரர்களுக்கும் வட்டி உட்பட பணம் அவரவர் கணக்குகளில் செலுத்தப்படுகிறது” என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சகத்தின் இந்த பதிலால் திருப்தி அடையாத மோகன் தாஸ் நள்ளிரவு மீண்டும் நிதியமைச்சகத்தின் ட்விட்டை ரீ ட்விட் செய்து இன்னொரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
”நிதியமைச்சகத்தின் பதிலுக்கு நன்றி. ஆனால் ஒவ்வொரு வருடமும் பிஎஃப் வட்டி தாமதமாகவே அவரவர் கணக்குகளில் வரவு வைக்கப்படுவது ஏன் என்று நீங்கள் விளக்க முடியுமா? பிஎஃப் கணக்குகள் முற்றிலும் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்க நிதியாண்டு முடிந்த 30 நாட்களுக்குள் ஏன் வட்டியை கிரடிட் செய்ய முடியாது?” என்றும் கேட்டிருக்கிறார் மோகன் தாஸ்.
மேலும், “ மே மாதத்தில் ஓய்வுபெறும் ஒருவருக்கு அவரது வட்டி பலன்களை எப்போது கொடுப்பீர்கள்?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு மேலும் சிலர் அவரது ட்விட்டர் தொடுப்பில் வந்து, “இபிஎஃப் வட்டி உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்து சேர தாமதமானாலும் அதனால் உங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை. அது நிச்சயம் உங்களுக்கு வந்துவிடும்’ என்று சிலர் தெரிவிக்கிறார்கள்.
இன்னும் சிலர், “ வருமான வரி ரிட்டர்ன்ஸ் செய்வதற்கு அரசு மற்றும் பொதுத்துறை தனியார் ஊழியர்களுக்கு கெடு வைத்து அபராதம் விதிக்கும் அரசு… பிஎஃப் வட்டி பணத்தை ஊழியர்கள் கணக்கில் செலுத்துவதற்கு ஏன் காலக்கெடுவை தனக்குத் தானே விதித்துக் கொண்டிருக்கவில்லை? இது இரட்டை நிலைதானே?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
–வேந்தன்
சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. 8 பேர் பலி!