தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வை எழுதும் தேர்வர்கள் ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 8 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.
கடைசி நாளான இன்று ஏராளமானோர் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இணையதளம் முடங்கியது.
இதனால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் திணறினர். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்தநிலையில் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள், அதாவது வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஆசிரியராக தொடர விரும்புவோர் கட்டாயம் டெட் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
