ஆந்திர மாநிலத்தில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் சிக்னல் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த பலாசா பயணிகள் ரயில் மீது ராயகட்ட பயணிகள் ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பெட்டிகள் தடம் புரண்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரவு நேரத்தில் விபத்து நடைபெற்றதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ராட்சத ஜெனரேட்டர்கள் கொண்டு வரப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்டு பணிகள் நடைபெற்றன.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பிரதமர் மோடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் ரயில் விபத்து தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள ரயில்வே நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 855000 41677, 83003 83004, 85005 85006, 0891 2746330, 0891 2744619 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ரயில் விபத்து நடந்த உடன் 3 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்த ரயில் விபத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் 2023-ல் சோகமான பாலசோர் ரயில் விபத்து நடந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்து துயரமளிக்கிறது.
எனது இதயம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் செல்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
