“2024-ல் நீங்கள் இங்கே…நாங்கள் அங்கே…” – தயாநிதி மாறன்

Published On:

| By Selvam

2024-ஆம் ஆண்டு ஆளும்கட்சி வரிசையில் உட்கார்ந்திருப்போம் என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அதிகாரிகள் நியமனங்களில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது தொடர்பான மசோதாவை நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்று வருகிறது.

திமுக சார்பில் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது , “அதானி விவகாரம் குறித்து பேசும்போதும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. தற்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேசும்போதும் அவைக்கு வர மறுக்கிறார். பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து பேச வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளாக பாஜக டெல்லியை ஆளவில்லை. ஆம் ஆத்மி பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  உங்கள் கூட்டணியான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறீர்கள்

மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை விசாரணைக்குள்ளான என்சிபி கட்சியினர் பாஜகவிற்கு வந்தவுடன் நல்லவர்களாகி விட்டார்கள். அமலாக்கத்துறை அதிகாரியின் பதவி காலம் நீட்டிப்பதற்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடிய பாஜக, அட்மினிஸ்ட்ரேட்டிவ் பவர் மிகவும் முக்கியமானது என்று மேல்முறையீடு செய்தது. உங்களுடைய நோக்கம் என்பது டெல்லி அரசை கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான். அங்குள்ள அதிகாரிகளை பாஜக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. டெல்லி மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

எதிர்க்கட்சி கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. 2024-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்க்கட்சிகள் வரிசையில் உட்கார்ந்திருப்பீர்கள். நாங்கள் ஆளும் கட்சி வரிசையில் உட்கார்ந்திருப்போம். மாநில அரசுகளுக்கு ஆளுநர் தேவையில்லை. தமிழ்நாடு ஆளுநர் 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் “என்று தெரிவித்தார்.

செல்வம்

ஆடிப் பெருக்கு நாளில் காவிரியில் மூழ்கி மூவர் பலி!

இறங்கி வந்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…நெகிழ்ந்த சி.ஆர்.சரஸ்வதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share