கைத்தறித் துறையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 43.31 லட்சம் பேர் கைத்தறி மற்றும் அதுசார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 77 சதவிகிதத்தினர் பெண்களாவர். இவர்களின் தொழில் முன்னேற்றத்துக்காக ஜவுளித் துறை சார்பாக நான்கு முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதலாவதாக, முத்ரா திட்டத்தின் கீழ் கடன், கைத்தறி மையங்கள் அமைப்பு மற்றும் சந்தை ஆலோசனை ஆகிய அம்சங்கள் அடங்கிய தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், கைத்தறி தொழிலாளர்களுக்கான நலத்திட்டம், நூல் விநியோகத் திட்டம் மற்றும் கைத்தறி மையங்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை எஞ்சிய திட்டங்களாகும்.
தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கைத்தறி மையங்கள் அமைக்கப் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 100 சதவிகித மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது. கைத்தறி மையங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 412 கைத்தறி மையங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,71,822 பெண்கள் பயன்பெற்றுள்ளனர். கைத்தறித் துறையில் சிறப்பாகச் செயல்படும் பெண்களைக் கௌரவிக்கவும், இத்துறையில் பெண்களை அதிகமாக ஈடுபட வைக்கவும், 2018 ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த தேசிய கைத்தறி தினக் கொண்டாட்ட விழாவில் பெண் கைத்தறியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பெண்கள் தினத்தை முன்னிட்டு மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கூறிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.�,