பீகாரில் ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்று பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
பீகாரில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் என்டிஏ கூட்டணி ,இந்தியா கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரு கூட்டணி கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 24) பீகாரில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை காட்டாச்சி என்றும் ஊழல் செய்தவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ‘நிதிஷ் குமார் ஆட்சியில் 55 ஊழல்கள் நடந்திருக்கிறது என்று பிரதமர் மோடியே கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாயில் சமையல் சிலிண்டர் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் அவர் முதியோர் உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
தேஜஸ்வியின் தேர்தல் வாக்குறுதிகள் பீகார் மக்களிடையே கவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
