சென்னையில் நேற்று (திங்கள்) இரவு விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தான் கொஞ்சம் ஓய்ந்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், வானம் கொஞ்சம் வெளிச்சம் காட்டுவதால், “அப்பாடா… புயல் கரை கடந்துவிட்டது, இனி பெரிய மழை இருக்காது” என்று சென்னைவாசிகள் மதிய வேளையில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்காது போலிருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இப்போது வெளியிட்டுள்ள ‘லேட்டஸ்ட்’ அறிவிப்பு, சென்னை மக்களை மீண்டும் கலக்கமடையச் செய்துள்ளது.
சென்னைக்குத் திரும்பும் ‘புயல் சின்னம்’! வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ‘டிட்வா’ (Ditwah) புயல் வலுவிழந்தாலும், அது சென்னையை விட்டு விலகிச் செல்லவில்லை. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) மாறி, வட தமிழகம் மற்றும் ஆந்திரக் கரையிலிருந்து வெறும் 35 கி.மீ தொலைவில் நகராமல் ஒரே இடத்தில் (Stationary) நங்கூரமிட்டுள்ளது.
வழக்கமாகப் புயல் கரையைத் தொட்டதும் வலுவிழந்து உள்ளே சென்றுவிடும். ஆனால், இப்போது ஒரு திருப்பமாக, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெல்ல வளைந்து, தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் சென்னையை (South Chennai) நோக்கித் திரும்பும் (Recurve) என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அடுத்த சில மணி நேரம் உஷார்! புயல் சின்னம் சென்னைக்கு மிக மிக அருகில் (35 கி.மீ) இருப்பதால், மதியம் மழை விட்டது போல் தெரிந்தாலும், அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் மழை வெளுத்து வாங்கக் கூடும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்:
மீண்டும் மிதமான முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையோடு, மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
எண்ணூரில் 26 செ.மீ மழை: ஏற்கனவே கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. பலத்த காற்றால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.
அதிகபட்சமாக எண்ணூரில் 26 செ.மீ மழையும், பள்ளிக்கரணையில் 10.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நகரின் முக்கிய சாலைகளில் இன்னும் தண்ணீர் வடிந்தபாடில்லை.
பொதுமக்களே கவனம்: “மழை நின்றுவிட்டது, வானம் வெளுத்துவிட்டது” என்று நம்பி, மதியத்திற்கு மேல் வெளியே கிளம்ப வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் பலத்த காற்றுடன் மழை மீண்டும் தொடங்கலாம். அடுத்த 12 மணி நேரத்தில் இது வலுவிழந்து சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றாலும், அதுவரை பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது.
