இலங்கையை புரட்டிப் போட்டு பேரழிவை ஏற்படுத்திய டிட்வா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை திடீரென 334 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டிட்வா புயல் சீற்றங்களில் சிக்கிய 370 பேரின் கதி என்ன என்பதும் தெரியவில்லை.
இலங்கையின் கிழக்கு மாகாண கடற்பரப்பில் உருவானது டிட்வா புயல். அதே வலுவான நிலையில் இலங்கையின் நிலப்பரப்புக்குள் டிட்வா புயல் ஊடுருவியது. இதனால் இலங்கை முழுவதும் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. ஒரு சில இடங்களில் 50 செ.மீக்கும் அதிகமான மழை பெய்தது.
இலங்கையின் மலையக மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறு சிறு குன்றுகள், மலைகள் அப்படியே சரிந்து பேரழிவை ஏற்படுத்தின. இதன் பின்னர் இலங்கையின் வட மாகாணத்தை கடந்து கடலுக்குள் இறங்கியது டிட்வா புயல். அங்கிருந்து வடதமிழ்நாட்டை நோக்கி பயணித்த இந்த புயல் தற்போது வலுவிழந்துவிட்டது.
டிட்வா புயல் இலங்கையை உருக்குலைத்துள்ளது; இலங்கை வரலாற்றில் இதுவரை காணாத மிகப் பெரிய பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது.
இலங்கையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா முழுமையாக இறங்கி உள்ளது. ஆபரேசன் சாகர் பந்து என்ற பெயரில் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதனிடையே இலங்கையில் டிட்வா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவு உள்ளிட்டவைகளால் சிக்கிய 370 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
