வங்கக்கடலில் உருவாகிறது ‘ஃபெங்கல்’ புயல்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Published On:

| By Minnambalam Login1

cyclone bay of bengal

வங்கக்கடலில் தற்போது நிலைத்திருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவம்பர் 26) புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை சில மணிநேரம் கன மழை பெய்ததால் வேளச்சேரி, பள்ளிக்கரனை உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில் நேற்று (25-11-2024) காலை 08.30 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில்  நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (26-11-2024) காலை 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும்,  நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுப்பெறக்கூடும்.

‘ஃபெங்கல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த புயல் அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இன்று (நவம்பர் 26) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (நவம்பர் 27) கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

நவம்பர் 26: அரசமைப்புச் சட்ட நாள்- பிசாசுகளை விரட்ட கோயிலை எரிப்பதா? 

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? – விஜய்க்கு கீதா ஜீவன் பதிலடி!

வார்னருக்கு இந்த நிலையா? 2 கோடினு வச்சும் யாரும் மணி அடிக்கலையே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share