பல்லடம் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் அரசு பள்ளி வாயிலை மறைத்து பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினரின் இந்த நடவடிக்கை மாணவர்களின் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 12) திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக பல்லடம் என்.ஜீ.ஆர் சாலையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக பல்லடம் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பேனர்கள்,கொடிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் என்.ஜீ.ஆர் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வாயிலை மறித்து கட் – அவுட் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமியின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் அரசு பள்ளியின் நுழைவு வாயிலை மறைத்து அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த அவதி அடைகின்றனர்.
