மத்திய அரசுப் பணியிடங்களில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் இருக்கும் போது, 71 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வழங்குவது ஒட்டகத்தின் வாய்க்கு சீரகத்தைக் கொடுப்பது போன்றதாகும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அன்றைய தினம் முதற்கட்டமாக, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்தநிலையில், ரோஜ்கார் வேலைவாய்ப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, இன்று 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ரோஜ்கார் மேளா திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பிரதமர் நரேந்திர மோடி வாக்காளர்களைத் தவறாக வழி நடத்துவதற்காக 71 ஆயிரம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ள போது 71 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்குவது ஒட்டகத்தின் வாய்க்கு சீரகத்தைக் கொடுப்பது போன்றது.ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக மோடி வாக்குறுதி அளித்தார். அதன்படி 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்

Comments are closed.