அ. குமரேசன்
ரசிகர் மன்ற முன்னணிச் செயல்பாட்டாளர் ஒருவரது பெற்றோரிடம் சில கேள்விகளை முன்வைத்தபோது, அவர்களின் பதில்களில் ஒருவேளை குறிப்பிட்ட நடிகர் அரசியலில் குதிப்பாரானால் தங்கள் மகனுக்கு ஒரு செல்வாக்கு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அரசியல் பாதைக்குப் போகவில்லை என்றால் கூட, தங்களது வட்டாரத்தில் மகன் எல்லோருக்கும் தெரிந்தவனாக மதிப்பைப் பெற்றிருப்பான் என்ற பெருமிதமும் வெளிப்பட்டது. culture of actor worship continue
1990ஆம் ஆண்டு வாக்கில், ‘செம்மலர்’ ஏட்டிற்காக மதுரையில் ரசிகர் மன்றங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசி ஒரு கட்டுரை எழுதினேன். ஒரு நடிகரின் மன்ற அலுவலகத்தில், உறுப்பினர் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக வைக்கப்பட்டிருந்தன.

“எதிர்காலத்தில் ஒருவேளை கட்சியாக மாறினால் தயாராக இருக்க வேண்டுமே, அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இது மட்டுமல்ல, இடதுசாரிக் கட்சிகளைப் போல நாங்களும் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட்டம் நடத்துகிறோம். culture of actor worship continue
என்ன வேறுபாடு என்றால், உதாரணமாக ரேசன் கடைப் பிரச்சினை வருவதாக வைத்துக்கொள்வோம், அப்போது அவர்கள் ஆர்ப்பாட்ட இயக்கம் நடத்துவார்கள், உறுப்பினர்கள் உணர்வுப்பூர்வமாகவே பங்கேற்பார்கள். நாங்கள் ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் போய்ப் பார்ப்போம். பிரச்சினை தீர்ந்துவிட்டால் மக்கள் எங்களிடம்தான் வருவார்கள் என்று மன்றத் தலைவர் கூறினார். இதைப் படிக்கிற நீங்கள் ஊகித்தது சரிதான், அது விஜய்காந்த் ரசிகர் மன்றம்தான்.
இதே போன்ற ஆர்வங்களுடன் இருக்கிறவர்களை ரசிகர் மன்றங்கள் ஒருவர்க்கொருவர் அறிமுகப்படுத்தி வைக்கின்றன. அந்த வகையில் மன்றம் சமூக உறவை வளர்த்துக்கொள்வதற்குக் கைகுலுக்க வைக்கும் மேடையாகிவிடுகிறது.
தொற்றிப் பரவும் அதிர்வு
அரசியலுக்கு வராவிட்டாலும், நட்சத்திர பீடத்தில் ஏறிக்கொண்ட நடிகரின் படத்தில் அரசியல் வசனங்கள் இடம்பெற்றால் அது அதிர்வை ஏற்படுத்துகிறது. அதுவாக அதிர்வை ஏற்படுத்தாவிட்டாலும், அரசியலுக்கு வர முன்னுரையா என்பது போன்ற தலைப்புகளுடன் அந்த வசனங்களைப் பல ஊடகங்கள் பரப்பிவிடுகின்றன. culture of actor worship continue
அந்த அதிர்வு மன்றத்தின் உறுப்பினருக்கு ஒரு உந்துதலைத் தருகிறது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஆந்திரத்தில் என்டிஆர் ஆகியோரது ரசிகர்களாக முன்னணியில் செயல்பட்டவர்கள் சிலர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்ற இருக்கைகளில் அமரவைத்து “அழகு பார்க்கப்பட்டார்கள்”. அதிலிருந்து ஏற்படும் அதிர்வு இது.

ஆட்சி மேலாண்மைக்கு நேரில் வரவில்லை என்றாலும் அரசியல் கட்சியாக உருவாவதே ஒரு மதிப்பிடத்தை அமைத்துக் கொடுக்கிறது. பொதுவாக ஒரு கட்சியின் கொடியுடன் செல்கிற வண்டிகளைக் காவல்துறையினர் (கறாரான ஆணையிடப்பட்டிருந்தாலன்றி) தடுக்காமல் விட்டுவிடுவதைப் பார்க்கிறோம்.
இது ஒருவகை அதிகாரச் சுவையையும் பாதுகாப்பான உணர்வையும் தருகிறது எனலாம். “அடுத்து நாமதான்” என்ற எண்ணத்தையும் தருகிறதோ என்னவோ! படத்தில் அரசியல் பேசி, களத்திலும் அரசியலுக்கு வந்துவிட்ட நடிகர்களின் ரசிகர்களை அந்த அதிர்வு தொற்றிக்கொள்வதில் வியப்பதற்கு ஏதுமில்லை. சமூவியலும் அரசியலும் இணைகின்ற கோட்டில்தான் ரசிக உளவியல் பயணிக்கிறது.
சொல்லப்போனால், அரசியல் கட்சிகள், குறிப்பாகத் தன்னல மறுப்போடு மக்களுக்காகக் களம் காணும் இயக்கங்கள் இந்த மூவியல் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. நடிகர்களின் ரசிகர்கள் பொது வாழ்விலிருந்து விலகிப் போகிறார்களே என்று விசனப்பட்டுக்கொண்டிராமல், அவர்களை ஈர்ப்பதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கு இந்த மூவியல் புரிதல் உதவும்.
டிக்கெட் பொருளாதாரம்
இந்த மூன்றையும் தாண்டி பொருளாதாரவியல் ஒன்று இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் டி.வி. சோமு: “பெரிய நட்சத்திரங்களின் படங்கள் திரையரங்கிற்கு வருகிற தொடக்க நாட்களிலேயே பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத் துடிப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சாதாரணமாக 100 முதல் 200 ரூபாய் வரையிலான டிக்கெட்டுகள் 1,000 முதல் 3,000 ரூபாய் வரையில் விற்கப்படும். இதில் திரையரங்கிற்கான உண்மைக் கட்டணம் போக மீதித் தொகையில் ஒரு பகுதி மன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். culture of actor worship continue

மற்றதெல்லாம் டிக்கெட்டை விற்றவர்களுக்குத்தான். சில நாட்களில் பல்லாயிரக்கணக்ககில், லட்சக்கணக்கில் கூட கையில் பணம் சேர்ந்துவிடும். இந்த வருமான ஏற்பாடு மன்றம் சார்ந்து செயல்படுவதற்கு இழுத்துக்கொண்டே இருக்கும்.
இதெல்லாம் குறிப்பிட்ட நடிகர் நட்சத்திர நிலையில் உச்சத்தில் இருக்கிற வரையில்தான். நட்சத்திர சந்தை மதிப்பு குறையக் குறைய, டிக்கெட் விற்பனை நின்றுவிடும். மன்றங்கள் கலைந்துவிடும் என்றும் அவர் கூறுகிறார். culture of actor worship continue
ஓர் இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்குத்தான் அழைப்புகள் வரும். கலை மீதான காதலோடு அதை ஏற்பவர்களும் உண்டு, அப்படிக் கீழே இறங்க வேண்டாம் என்று ஒதுங்கிவிடுகிறவர்களும் உண்டு.
அவர்களின் படங்களுக்கு விழுந்து விழுந்து வேலை செய்த ரசிகர்களும் ஒதுங்கிவிடுவார்கள். தங்களுடைய கடவுளையே கூட மாற்றிக்கொள்ளத் தயாராக உள்ளவர்கள் தங்களின் நாயக நட்சத்திரத்தை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. இதுவும் ஒரு ரசிகவியல் தனித்துவம்தான்.
விசுவாசத்தை வேறு மன்றத்துக்கு மாற்றிக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆகப் பெரும்பாலும், அந்த டிக்கெட் விற்பனை வருவாய்க்காக மட்டும் முந்தைய மன்றத்தில் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
சாதியின் பிடி இருக்கிறதா?
மாற்றிக்கொள்ள முடியாத இன்னொரு சமூக அமைப்பு – சாதி. மதம் மாறினாலும் சாதி மாற முடியாது என்பது சாதியத்தின் இறுக்கமான பிடிப்புக்குச் சான்று. சாதியைச் சுமந்துகொண்டு திரிந்ததற்காக வெட்கப்படக்கூடிய ஒருவர் அதைத் தலைமுழுகிவிட்டு வெளியேறலாம், சாதிக்காரர்கள் உள்பட சமூகம் அதைப் பொறுத்துக்கொள்ளும். ஆனால், இந்தச் சாதி பிடிக்கவில்லை என்று வேறு சாதிக்குத் தாவ முடியாது, அந்த வேறு சாதிக்காரர்களும் ஏற்கமாட்டார்கள், சமூகமும் அங்கீகரிக்காது.
இந்தச் சூழலில், ரசிகர் மன்ற உறுப்பினர்கள் சாதி அடிப்படையில் பிரிந்து நிற்பதில்லை என்ற ஓர் ஆக்கப்பூர்வமான காட்சியைக் காண முடிகிறது. மன்றத்திற்கு வெளியே மறுபடி சாதி அவர்களைக் கவ்விக்கொள்ளும் என்றாலும், மன்றமாகச் செயல்படுகிறபோது சாதி வந்து பிரிப்பதில்லை.
அரிதாகச் சில குறிப்பிட்ட வட்டாரங்களில் குறிப்பிட்ட சாதிகள் மக்கள்தொகை அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அந்தச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் மிகுதியாக ரசிகர் மன்றத்திற்கு வரக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனாலும் மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டோ, மற்றவர்களை ஒதுக்கிவைத்தோ செயல்படுவதில்லை.

பல அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயே கூட சாதி அணிகள் இருக்கிற காட்சியோடு ஒப்பிட்டால் ரசிகர் மன்றங்களின் இந்தத் தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இந்த அவதானிப்பைப் பகிர்ந்துகொண்டபோது ஒரு நண்பர் இப்படிக் கேட்டார்: “அப்படியானால் கட்சிகளை விட்டுவிட்டு ரசிகர் மன்றங்களை வளர்க்கலாம் என்று சொல்கிறீர்களா?” மன்றப் பணிகளைச் சாதி கடந்து செய்கிறார்களேயன்றி, மன்றத்திற்கு வெளியே அவரவர் சாதிக் கூண்டுக்குத் திரும்புகிறவர்கள்தான் மிகுதியாக இருப்பார்கள். culture of actor worship continue
அதேவேளையில், மன்றச் செயல்பாட்டின் இந்தக் கூறு, சாதியற்ற சமத்துவ லட்சியம் உள்ள இயக்கங்களின் அவதானிப்புக்கும் உரியது. இந்த விளக்கத்தை அந்த நண்பர் ஏற்றுக்கொண்டார். ஆயினும், நீக்கமற எங்கும் ஊடுருவியிருக்கும் சாதி ரசிகர் மன்றங்களை மட்டும் விட்டு வைத்திருக்குமா? அது பற்றிய ஆய்வும் தேவைதான்.
ரசிகர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நடிகர்களின் பெயர்களைச் சூட்டுவது பற்றி ஒரு கலந்துரையாடலில் பேசப்பட்டது. அதில் தனது கருத்துகளைக் கூறிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ந. நன்மாறன், “பிள்ளைகள் வளர வளர, பாரம்பரியமான, குடும்பப் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயரும் சேர்ந்துகொள்ளும். மக்களுக்கு நன்றாக அறிமுகமாகிவிட்ட முன்னணி நடிகர்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதியை ஒட்டிக்கொள்ள மாட்டார்கள், அப்படி ஒட்டுவதற்கு அந்தப் பெயர்கள் வாகாகவும் இருக்காது. அது நல்லதுதானே என்று கூறினார்.

புகழ்பெற்ற நட்சத்திரங்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதி அடையாளத்தை ஒட்டிச் சொல்லி, “இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் கேட்டபோது, அதற்கான ஏற்பாக சிரிப்பலை எழுந்தது. culture of actor worship continue
மதங்கள் சார்ந்த விழாக்கள் வருகிறபோது மன்றங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் நட்சத்திரங்களுடைய உருவங்களுடன் வாழ்த்துப் பதாகைகள் வைக்கிறார்கள், குடிநீர் வழங்குவது உள்ளிட்ட உதவிகளைச் செய்கிறார்கள். எந்த மதத்துக்கான கொண்டாட்டமானாலும் இவர்கள் இப்படியான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது நலமுடையதுதானே?
நான்கு திசைகளில்…
மற்ற பல நாடுகளிலும் அரசியலில் காலூன்றிய நடிகர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் அரசுத் தலைவராகவே இருந்த ரொனால்டு ரீகன், கலிபோர்னியா மாநிலத்தின் கார்மல் பை தி சீ நகர மேயராக இருந்த கிளின்ட் ஈஸ்ட்வுட், அந்த மாநிலத்தின் ஆளுநராக (முதலமைச்சர்) தெர்ந்தெடுக்கப்பட்ட அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், மேயராகவும் பின்னர் ஒரு சட்டமன்ற மாவட்டத்திற்கு அமெரிக்க அரசுப் பிரதிநிதியாகவும் செயல்பட்ட சன்னி போனா,
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இளையதலைமுறையினரைத் திரட்டிய பெப்பே கிரில்லோ – ஆகியோர் திரையுலகத்திலிருந்து வந்தவர்கள்தான். culture of actor worship continue

ஆனால், படங்களில் நடித்துக்கொண்டே கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டவர்கள், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தியவர்கள். திரைமுகம் அவர்களுக்கு ஓர் அறிமுகத்தைக் கொடுத்ததேயன்றி, அவர்கள்தான் மக்களைக் காக்க அவதரித்தவர்கள் என்றெல்லாம் மக்கள் நம்பிவிடவில்லை. பெரும் ரசிகத் திரள் கொண்ட லியானார்டோ டி காப்ரியோ உள்ளிட்டோரும் உண்டு. திரை நடிப்புக்கான ரசனையோடு சரி, வழிபாட்டு சங்கதியெல்லாம் கிடையாது. culture of actor worship continue
ஹாலிவுட்டின் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் சீன் கானரி தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார், அவருக்கு மதுரையில் ரசிகர் மன்றமே இருந்தது.
அதே போல தமிழ்நாட்டின் ரஜினிகாந்த்துக்குத் திடீரென ஜப்பான் நாட்டில், அவருடைய ‘முத்து’ படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் விழா எடுத்தனர் (தமிழ்நாட்டவர்கள் அல்ல). இப்போதும் அங்கே அவருக்கு அதே ரசிக வட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

‘ராஷமோன்’, ‘செவன் சாமுராய்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற டோஷிரோ மிஃபூன், ஜப்பான் திரையுலகப் பொற்காலப் பெண் நடிகர் என்று குறிப்பிடப்படும் செட்சுகோ ஹரா, உலக அளவில் அறியப்பட்டவரான கென் டகாகுரா, ஹாலிவுட் படங்களிலும் நடித்துவரும் கென் வாட்டனாபே, ஹிரோயுகி சனாடா, சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர் என்று பாராட்டப்படும் கென்டோ யமாசாகி உள்ளிட்ட நடிகர்களுக்கும் மன்றங்கள் இருக்கின்றன.
அந்த மன்றங்கள் அந்த நடிகர்களின் நிறுவன அமைப்புகளாகவே செயல்படுகின்றன. படங்களுக்கான விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றன. சமூக ஊடகங்களின் வழியாக இணைந்து பிடித்தமான நடிகர்களின் பெயர்களில் தங்கள் விருப்பப்படி செயல்படும் ரசிகர்களின் அமைப்புகளும் உண்டு என்று இணையத் தளத் தகவலொன்று தெரிவிக்கிறது. டோக்கியோ ஆளுநராக இருந்த ஷின்டாரோ இஷிஹாரா, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டாரோ யமமோட்டோ ஆகியோர் திரை நடிப்புப் பின்னணி கொண்டவர்கள்.
தென் கொரியாவில் ரசிகர்களால் நன்கொடை வழங்குவது உள்பட தடபுடலாகப் பிறந்தநாள் கொண்டாடப்படுகிற கலைஞர்கள் இருக்கிறார்கள். சீனா, மெக்சிகோ, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வழிபாடாக மாறாத பரவலான ரசிக வட்டங்கள் இருக்கின்றன.
இது தொடருமா?
ஆக, தமிழகம் இதில் தனித்துவமானதுதான். இது தொடருமா? திரை நட்சத்திரங்களுக்கான ரசிகப்படைகளும் கொண்டாட்டங்களும் நிலையான அடையாளமாகவே இருக்குமா? நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கான தாவு தளமாக திரைப்படம் நிலைக்குமா? கடந்த கால அனுபவங்களை மட்டும் வைத்துக் கணித்துவிட முடியாத சோதிடப்பலன்கள் இவை.
“ஜனநாயகன்” படத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய் என்ன பேசுகிறார், என்ன செய்கிறார் என்றுதான் ஆராயப்படும். அவரை “அண்ணா அண்ணா” என்று உணர்வுப்பூர்வமாகவே விளிக்கிற தம்பிகளையும் தங்கைகளையும் தாண்டி, வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியவர்களான தமிழக மக்கள். culture of actor worship continue

இனி ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு நிலைமையிலும் அரசியல் செயல்பாட்டாளராக அவர் எத்தகைய நிலைப்பாடுகளை மேற்கொள்வார், யார் பக்கம் நிற்கிறார் என்று கவனித்து வருவார்கள். திரைப்படக் குறும்புகளையும் சாகசங்களையும் ரசித்தவர்கள் எல்லோரும் அரசியல் முனைப்புகளை அப்படியே ஆதரித்துவிட மாட்டார்கள் – இது அவருக்கும் தெரியும், தெரிந்திருக்க வேண்டும்.
நடிகர் சத்யராஜ் நேரடியாக அரசியல் மேடைக்கு வரவில்லை என்றாலும் பொதுப் பிரச்சினைகளில் தனது கருத்துகளை, குறிப்பாகப் பகுத்தறிவுச் சிந்தனைகளை வெளிப்படுத்திவந்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் ஒரு நடிகர் என்ற ஈர்ப்பு இருந்தாலும் அவர், தொழிலைப் பாதிக்கக்கூடும் என்ற நிலையிலும் துணிவோடு வெளிப்படுத்திவரும் அரசியல் கருத்துகள் கவனம் பெறுகின்றன. அது அவருக்குத் தேர்தல் வெற்றியைத் தரவில்லையானாலும் ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருக்கின்றன.

மற்ற கலைஞர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது கலைச் செயல்பாடுதான் ரசனைக்கு உரியதாக எடுத்துக்கொள்ளப்படும். முதலில் பார்த்தது போல சூர்யா, விஜய் சேதுபதி, அஜித், கார்த்தி உள்ளிட்ட சில நட்சத்திர நடிகர்கள் வழிபாட்டுக் கலாச்சாரம் வேண்டாம் என்று ரசிகர்களுக்குச் சொல்கிறார்கள் என்றாலும், இரவோடு இரவாக இது மாறிவிடாது.
ஆயினும், திரையரங்கிற்குள், அந்த இருளில், திரையை மட்டுமே பார்த்தாக வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, ஓடிடி மேடைகள், சமூக ஊடகங்களின் வளர்ச்சியில் திரைப்படங்கள் ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கங்களும் முன்போல இருக்காதென ஊகிக்கலாம். அடுத்த தலைமுறையினர் கண்மூடித்தனமாக வழிபடுவதிலிருந்து விலகியவர்களாக, கலைத்திறன்களையும் நுட்பங்களையும் வரவேற்றுப் பாராட்டுகிறவர்களாகப் பரிணமித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். culture of actor worship continue
பெரிய அகன்ற அதிரடி ஒலிபெருக்கி ஏற்பாடுகளுடனான திரை இப்போது கையடக்கமான, செவிப்பேசிகளுடனான திரையாக மாறியிருக்கிறது. நாயக நட்சத்திரங்கள் நடந்து வருவதை மெதுவான அசைவில் காட்டி உண்மை வாழ்க்கையை விட மிகப்பெரியவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது இனிமேலும் சாத்தியமாகாது.
அதே வேளையில் அரசியல் விழிப்புணர்வுக்கும், எழுந்திடும் சமுதாயம் முற்போக்கான பாதையில் நடைபோடுவதற்கும் ஒரு கலைத்துணை என்ற பங்களிப்பைத் திரைப்படம் தொடரும், தொடர வேண்டும். திரைக்கலைஞர்கள் தொடர்வார்கள், தொடர வேண்டும். culture of actor worship continue
(நிறைவு)
சினிமா ரசிகவியல் – 1…. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஏற்படுத்திய அரசியல் தாக்கம்!
சினிமா ரசிகவியல் – 2: மன்றத்தில் செயல்படுவதால் சமூகத்தில் ஒரு மதிப்பு உருவாகிறதா?
கட்டுரையாளர் குறிப்பு: அ. குமரேசன் the political impact of mgr and ntr part 2

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். பல்வேறு உலக இலக்கிய, அரசியல், சமூக படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். the political impact of mgr and ntr part 2