கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் இன்று (ஜூன் 27) காலை மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கடலூர் தாழங்குடா மீனவ கிராமத்தில் இரண்டு மீனவ பிரிவினருக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் மதிவாணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஊரில் ஏற்பட்ட கலவரத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மதிவாணன் கொலை வழக்கில் தற்போதைய தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட மதியழகன் ஊருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஜாமீனில் வெளியே வந்த மதியழகன் மஞ்சகுப்பம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இன்று காலை மதியழகன் வீட்டில் இருந்து வெளியே வந்த போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளுடன் துரத்தியது. மதியழகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல் தப்பி ஓடியது.
இதனை தொடர்ந்து கடலூர் காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டு மதிவாணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதியழகன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கடலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தாழங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
