2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். CSK sign with baby abd Dewald Brevis against mi
நடப்பு ஐபிஎல் தொடரில் படுமோசமான நிலையில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5ல் தொடர் தோல்வியை சந்துள்ள சிஎஸ்கே, புள்ளிப்பட்டியலில் கடைசி (10வது) இடத்தில் உள்ளது.
மேலும் காயம் காரணமாக ருத்துராஜ் விலகல், கேப்டன் உட்பட அணி வீரர்கள் மாற்றம் என தொடரின் முக்கியமான கட்டத்தில் அணிக்குள் சோகங்கள் தொடர்கின்றன.
ஏற்கெனவே ருத்துராஜுக்கு பதிலாக, மும்பையைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரேயை ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை அணி.
இந்த் நிலையில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை அணி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
கடந்த சீசனில் மும்பை அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய அவர் கழட்டி விடப்பட்டார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெகா ஏலத்தில் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாயுடன் வந்த பிரெவிஸை யாருமே வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அவரை 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கிரிக்பஸ் இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி பேட்ஸ்மேனான இவரை ரசிகர்கள் ’பேபி ஏபிடி’ என செல்லமாக அழைக்கின்றனர். 21 வயதான பிரெவிஸ் இதுவரை 81 டி20 போட்டிகளில் விளையாடி, கிட்டத்தட்ட 145 ஸ்ட்ரைக் ரேட்டில் 2000 ரன்களை எட்டியுள்ளார்.
சர்வதேச போட்டிகள் தவிர மேஜர் லீக் கிரிக்கெட், எஸ்ஏ20 மற்றும் ஐபிஎல் போன்ற பல டி20 லீக்குகளில் விளையாடி வருகிறார்.
அணியில் இருக்கும் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்கள் சொதப்பி வரும் நிலையில், டாப் ஆர்டரை வலுப்படுத்தும் நோக்கில், ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் என இளம் வீரர்களை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது சிஎஸ்கே.
சென்னை அணியின் இந்த முயற்சியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இளம் வீரர்களின் வருகையால் உற்சாகமடைந்துள்ள சென்னை அணி, வரும் 20ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
