சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 30) ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் கரண் அதிரடியாக ஆடி 88 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி தரப்பில் சஹால் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா (23) மற்றும் பிராப்சிம்ரன் (54) சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
அதன்பின்னர் அதிரடியாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஷ் (72) பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் பவுண்டரியுடன் எளிதாக இலக்கை எட்டியது.
4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. சென்னை அணி மேலும் ரன்ரேட் குறைந்து 10வது இடத்தில் நீடிக்கிறது.