புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சிபிஎஸ் (Contributory Pension Scheme) ஒழிப்பு இயக்கம் நாளை (மே 5) தடையை மீறி இருசக்கர வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. cps abolition movement decide
இதுதொடர்பாக, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் இன்று (மே 4) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண்: 309 ன் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாளை (மே 5) முதல் குமரி மாவட்டம் களியாக்காவிளை, கோவை மாவட்டம் வாளையாரு மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி ஆகிய மூன்று இடங்களிலிருந்து மூன்று குழுக்களாக சென்னை செல்ல திட்டமிட்டிருந்தோம்.
செல்லும் வழியில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்காக, முறையாக அனுமதி வழங்கக்கோரி காவல் துறையில் கடிதம் அளித்துள்ளோம்.
இந்நிலையில், கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலையத்தில் இருந்து அனுமதி மறுத்து நேற்று (மே 3) இரவு கடிதம் வழங்கியுள்ளனர். பொது மக்களை நாங்கள் சந்தித்திப்பதில் திமுக அரசுக்கு ஏன் இந்த பயம்? அடக்குமுறையால் போராட்டங்களை ஒடுக்க முடியாது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்தபடி இரு சக்கர வாகனப் பிரச்சார இயக்கம் காவல் துறை அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் திட்டமிட்டபடி நடைபெறும்.
நாளை காலை 10 மணிக்கு களியாக்கவிளை, வாளையாரு, தனுஷ்கோடி ஆகிய இடங்களிலிருந்து திட்டமிட்டபடி இரு சக்கர வாகனப் பிரச்சார இயக்கம் துவங்கும்.
நாளை துவங்கும் இரு சக்கர வாகனப் பிரச்சார இயக்கத்தில் பங்கேற்க ஒத்துக் கொண்டவர்கள், இன்று இரவே சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்று இரவு 8 மணிக்கு காணொளி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். cps abolition movement decide
