விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு பயிலும் மாணவர்களின் குடிநீர் வசதிக்காகவும் சமையலுக்காகவும் குடிநீர் தொட்டியானது பள்ளிக்கு அருகில் உள்ளது.
நேற்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு திரும்பும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமைப்பதற்காக சமையலர் முத்துச்செல்வி பள்ளிக்கு வந்துள்ளார்.
அப்போது குடிநீர் தொட்டியில் உள்ள நீரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் குடிநீர் தொட்டியைத் திறந்து பார்த்து போது மாட்டுச் சாணம் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அப்பகுதியில் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சிண்டெக்ஸ் குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மோனிஷா
