கோவிஷீல்டு தடுப்பூசியைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த ஜனவரி மாதம் முதல் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சீரம் நிறுவனம் தயாரித்து வரும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டது. ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோவிஷீல்டு தடுப்பூசி விலையானது மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்து அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ரூ.150க்கு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அந்த பிரச்சினை முடிந்தவுடனே, அடுத்த பிரச்சினை தயாராகிவிட்டது. கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், அதனுடைய விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.1,200 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு ஒரு டோஸ் கோவாக்சின் 15 முதல் 20 டாலருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் விலை ரூ .400 மற்றும் 600 என்று உயர்த்தப்பட்டதை நியாயப்படுத்தியவர்கள், இன்று அறிவிக்கப்பட்ட கோவாக்சின் விலை மாநிலங்களுக்கு ரூ.600, தனியார்களுக்கு ரூ.1,200 என்பதை நியாயப்படுத்துவார்களா?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“கோவாக்சினுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது பாரத் பயோடெக் நிறுவனம். மாநில அரசுகள் நேரடியாக வாங்கினால் ஒரு டோஸ் ₹600. தனியாருக்கு ₹1200. கொரோனா சமூகத்தில் பெருந்தொற்று, சந்தையில் பெருங்கொள்ளை” என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
**வினிதா**
.,”
