hகொரோனா: பிரச்சாரத்தை ரத்து செய்த மம்தா

Published On:

| By Balaji

மேற்கு வங்கத்தில் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தனது பிரச்சாரத்தை ரத்து செய்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஓ.பிரியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதி வேகமாகப் பரவி வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது அரசியல் பேரணிகளை நிறுத்துவதாக அறிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் பெரிய அளவிலான பொது பேரணிகளை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆழமாகச் சிந்திக்க அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த சூழலில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டார் என்று டெரிக் ஓ.பிரியன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான 26ம் தேதி அன்று அடையாளமாகக் கூட்டம் நடத்துவார். அனைத்து மாவட்டங்களிலும் தனது பேரணிக்கான நேரத்தை 30 நிமிடங்களாகக் குறைத்துக் கொண்டுள்ளார் என்றும் டெரிக் ஓ.பிரியன் கூறியுள்ளார்.

எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் 24, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி மேற்கு வங்கத்துக்கு வருகை தர உள்ளார்.

ஏற்கனவே வைரஸ் தொற்று பரவுவதைக் கண்டு மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும் தேர்தல் ஆணையம் அதை ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share