விவேக் கணநாதன்
கொரோனா தொற்றுப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நிதி சேமிப்பதற்காக ‘PM Cares’ என்ற புதிய அமைப்பை மார்ச் 28ஆம் தேதி தொடங்கினார் மோடி.
ஏற்கனவே, பிரதமர் நிவாரண நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. இது 1948இல் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் எந்த பேரிடர் வந்தாலும் அமைப்பாக, தனி நபராக யார் ஒருவரும் இதற்கு நிதி அளிக்கலாம். 2011 முதல் வெளிநாட்டவரும் நிதி வழங்கலாம்.
ஆண்டுதோறும் சில நூறு கோடிகள் இதில் பணம் சேர்கிறது. 2018-19இல் வந்த நிதி 783 கோடி. செலவு செய்யப்பட்டது 212 கோடி.
2019, மார்ச் 31ஆம் தேதி தணிக்கை செய்யப்பட்ட கணக்கின்படி, இந்த அமைப்பில் சுமார் 3,800 கோடி நிதி கையிருப்பு இருக்கிறது. கொரோனாவுக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய மொத்தத் தொகையைவிட சில கோடிகள் அதிகம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் நிதிக்கு, வருமான வரி விதி 80Gஇன் கீழ் 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
கையிருப்பில் சில ஆயிரம் கோடி நிதியோடு, 73 ஆண்டுக்கால பாரம்பரியத்துடன் இப்படி ஒரு அமைப்பு இருக்கும்போது, அவசர அவசரமாக திடீரென PM Cares என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார் மோடி.
ஏன்?
புதிதாக அறிவிக்கப்பட்ட PM Cares Fund-க்கு வழங்கப்படும் நிதிக்கும் 100% வருமான வரி விலக்கு உண்டு. மேலும், CSR எனப்படும் Corporate Social Responsiblity நிதியாகவும் இது ஏற்றுக்கொள்ளப்படும்.
அது என்ன CSR?
கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் கடந்த 3 ஆண்டு நிகர லாபத்தின் கூட்டு சராசரியாக, குறைந்தபட்சம் 2% தொகையை சமூக நலப்பணிகளுக்காக ஒவ்வோர் ஆண்டும் செலவிட வேண்டும்.
2014 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இது கட்டாயமானது. இந்த நிதியை நேரடியாகவோ, அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தியோ அல்லது ஏற்கனவே உள்ள அறக்கட்டளைகள், முகவர் அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மூலமாகவோ செலவிடலாம்.
இந்த CSR திட்டத்தின் கீழ் இந்தியாவில் 16,000 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014-19 வரையிலான 5 ஆண்டுகளில், இந்தியாவில் CSRஇன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பெனிகள் மொத்தமாக சுமார் 1.03 லட்சம் கோடி ரூபாயை சமூக நலப்பணிகளுக்காக ஒதுக்கியுள்ளன. இதில், 69,800 கோடி செலவிடப்பட்டுள்ளது. 33,200 கோடி செலவிடப்பட்டவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் செலவிடப்பட்ட தொகை, ‘Health care’-க்காகத்தான்.
சுமார் 9,020 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தணிக்கை சொல்கிறது.
இந்தியா முழுவதும் ‘கார்ப்பரேட்டுகள்’ செலவிட்டதாக சொல்லப்படும் இந்த 69,800 கோடியில் பெரும்பங்கு பொதுத் துறை நிறுவனங்களுடையது. ஆம். பாரத் பெட்ரோலியம், AIR India, ONGC, BSNL, IRCTC, NLC உட்பட, இந்தியாவின் ‘மகாராத்னா’ நிறுவனங்கள் அடங்கலாக, சுமார் 152 பொதுத் துறை நிறுவனங்கள் CSRன் கீழ் வருகின்றன.
இந்த 152 நிறுவனங்கள் மட்டும் சுமார் 12,842.77 கோடி நிதியை கடந்த 5 ஆண்டுகளில் CSR நிதியாக செலவு செய்துள்ளன. அதாவது மொத்த செலவில் 18.6%.
ஆனால், இந்த செலவு என்பது அந்த பொதுத் துறை நிறுவனங்கள் உண்மையில் ஒதுக்கிய மொத்த தொகையில் 50% மட்டுமே. ஏனெனில், பல பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் CSRஇன் கீழ் ஒதுக்கிய முழு நிதியையும் செலவிடுவதில்லை. உதாரணமாக, ONGC நிறுவனம் 2017-18 ஆண்டுக்கு 2017 கோடி நிதி ஒதுக்கியது. அதில் சுமார் 503 கோடி மட்டுமே செலவு செய்தது. அதாவது 25%.
எனவே, ஒட்டுமொத்தமாக பொதுத் துறை நிறுவனங்கள் செய்த CSR ஒதுக்கீடு என மதிப்பிட்டால், கடந்த 5 ஆண்டுகளுக்கு சுமார் 30,000 கோடி. அதாவது, இந்தியா முழுவதும், கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த கார்ப்பரேட் சமூக பங்களிப்பு நிதியில் சுமார் 30%.
CSRஇன் கீழ் பதிவு செய்யப்பட்ட 16,000 நிறுவனங்களில் 71% நிறுவனங்கள் 50 லட்சத்துக்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யும் தகுதி உடைய ‘சிறிய நிறுவனங்களே’. 10 கோடி ரூபாய்க்கு மேல் CSR செலவு நிதியாக ஒதுக்கக்கூடிய திறன் உள்ள ‘பெரிய நிறுவனங்கள்’ வெறும் 1.35% மட்டுமே. அதாவது அதிகபட்சம் 250 கம்பெனிகள்.
ஆனால், இந்த 1.35% கம்பெனிகள்தாம் இந்தியாவின் மொத்த CSR செலவினத்தில் 53% வரை பங்களிப்பு செய்துள்ளன. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட 69,800 கோடியில், சுமார் 36,994 கோடி ரூபாய், சராசரியாக 250 நிறுவனங்களால் மட்டும் செலவிடப்பட்டவை.
இந்த 250 கம்பெனிகளுக்குள் குறைந்தது 50 அரசு பொதுத் துறை நிறுவனங்கள் வந்துவிடும். ஏனெனில், மேலே குறிப்பிட்டபடி பொதுத் துறை நிறுவனங்கள் பல ஒவ்வோர் ஆண்டும் சில நூறு கோடி நிதியை CSR நிதியாக ஒதுக்குகின்றன.
எனவே, 10 கோடிக்கு மேல் CSR நிதி ஒதுக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் என பார்த்தால் அதிகபட்சம் 180-200 கம்பெனிகள் வரும். இவை அதிகபட்சமாக சுமார் 24,000 கோடி ரூபாயை CSR நிதியாகச் செலவிட்டுள்ளன.
இந்த கம்பெனிகள், இப்போது மோடி உருவாக்கியுள்ள PM Caresக்கு அளிக்கும் நிதியை, இந்த CSRஇன் கீழ் கணக்கு காட்டிக்கொள்ளாலாம்.
சிறப்பு என்ன தெரியுமா?
PM Care-க்கு அளித்தால் ‘மட்டும் தான்’ CSR நிதியாக கணக்குக் காட்ட முடியும். மாநில முதலமைச்சர் நிதிக்கு வழங்கினால், அதை CSR நிதியாக கணக்குக் காட்ட முடியாது.
கேட்டால், மாநிலத்துக்கு நிதி வழங்கி CSR ஒதுக்கீட்டில் கணக்கு காட்ட வேண்டுமா?
‘மாநில பேரிடர் மேலாண்மை ஆணையருக்கு நிதி வழங்குங்கள்’ என்கிறது மத்திய அரசு.
தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையத்தின் இணையதளத்துக்குச் சென்று பார்த்தால், பேரிடர் நிதி கொடுக்க வேண்டுமானால், ‘முதலமைச்சர் நிவாரண நிதிக்குத்தான் கொடுக்கும் வசதியுள்ளது’. மாநில பேரிடர் ஆணையருக்கு என்று தனியாக இல்லை.
ஏன் இவ்வளவு குழப்பம்? மாநில முதலமைச்சர் நிதி திரட்டலையும் CSRஇன் கீழ் கொண்டு வந்தால் என்ன?
கேட்டால், காங்கிரஸ் கொண்டு வந்த 2013 கம்பெனிகள் சட்டம்தான் காரணம் என்கிறார்கள் பாஜகவின் ஊடக வாய்மூலங்கள்.
அந்தச் சட்டப்படி, மத்திய அரசு நிர்ணயித்திருக்கும், ‘2% குறைந்தபட்ச செலவு’ என்கிற அளவுக்கு உட்பட்டு, மாநில முதலமைச்சர் நிதிக்கு கொடுத்தால், அந்தத் தொகை CSRஇன் கீழ் வராது. மாறாக 2% செலவுக்கு மேல், அதைத் தாண்டி, கூடுதல் நிதியை, ஒரு நிறுவனம் CSR நிதி ஒதுக்கினால், அதை மாநில முதலமைச்சர் நிதிக்கு வழங்கலாம். அந்த நிதியை CSR கணக்கில் காட்டலாம்.
இவ்வளவு எல்லாம் ஏன், 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்வட்ச் பாரத், கங்கை தூய்மைத் திட்டம் போன்றவற்றுக்கு நிதி வழங்கினாலும், அதை 2% தொகைக்கு உட்பட்டே CSR நிதியாக ஏற்றுக்கொள்ளலாம் என கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் சாதாரண அறிவிப்பாணை மூலம் எளிமையாக அறிவித்தது.
அப்படி ஏன் இப்போது, மாநில முதலமைச்சர் நிதி விவகாரத்திலும் அறிவிக்கக்கூடாது?
மத்திய அரசிடம் பதில் இல்லை.
மாறாக, ஒட்டுமொத்த CSR சட்டத்தையும் மாற்றப்போவதாக அறிவித்து மக்களிடம் கருத்து கேட்க தொடங்கியுள்ளது மோடி அரசு.
இப்போது இதைக் குறிவைத்தே பல நிறுவனங்களும், மோடியின் PM Caresக்கு நிதி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு பேரழிவுகளும், பேரிடர்களும் வந்துள்ளன. அப்போதெல்லாம், நேரு உருவாக்கிய பிரதமர் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்காதவர்கள், மோடி அறிவித்த அடுத்த சில நாட்களுக்குள் அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில், CSR நிதியிலிருந்து பிரதமர் நிவாரண நிதிக்கு வந்த தொகை 757 கோடி. ஆனால், மோடி அறிவித்த PM Careக்கு ஒரே வாரத்தில் 6,500 கோடி வசூலானது. இவற்றில் மிகப்பெரும்பான்மையான பணம், தனியார் கார்ப்பரேட்டுகளுடையது.
இந்தப் பணம் அனைத்துக்கும் 100% வருமான வரி விலக்கும் உண்டு. வருமான வரித் துறையின் 80G பிரிவு இவ்விலக்கை அங்கீகரிக்கிறது.
ஆனால், பிரிவு 80Gஇன்படி, ‘பணமாக’ கொடுத்தால் மட்டும்தான் வரிவிலக்கு. பொருளாக கொடுத்தால் விலக்கு கிடையாது. அதனால்தான், பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பணமாக கொடுக்கின்றன.
‘சரிப்பா. எவ்வளவு கொடுத்தா என்ன? மறைச்சா என்ன? நாட்டு நல்லதுக்கு ஏதோ குடுக்குறாங்கள்ள. அதைப்போயி நொய்யி நொய்ங்கிற…’ என நீங்கள் பாயலாம்.
காங்கிரஸ் ஆட்சியில், 2014இல் இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டபோதே கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது கார்ப்பரேட்கள் நிதி மோசடி செய்யவே வழிவகுக்கும் என கண்டனங்கள் எழுந்தன.
இப்போது, PM Caresக்குக் கீழே வழங்கப்படும் நிதிகளின் தன்மை இன்னமும் சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏனெனில், CSR விதி, குறைந்தபட்சம் 2% தொகையை செலவிட வேண்டும் என்று மட்டும் தான் சொல்கிறது. அதிகபட்சம் எவ்வளவு என கணக்கு கிடையாது. உணவு, உடை, பாதுகாப்பு என பல்வேறு வடிவங்களில் நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; எனில், எவ்வளவு வேண்டுமானாலும் கணக்கு காட்டலாம். அதற்கு உதாரணம் தான், 2%க்கு மேல் செலவு செய்தால், மாநில முதலமைச்சர் நிதியும் CSRஇல் சேர்க்கப்படும் என்கிற ஷரத்து.
தனியார் ஏஜென்சி அல்லது அறக்கட்டளை மூலம் உதவுவதை CSR விதிகள் அங்கீகரிக்கிறது. இதைப்பயன்படுத்தி நடக்கும் இடைத்தரகர் வியாபாரம், மோசடிகள் மிக மிக அதிகம் என இந்திய கார்ப்பரேட் விவகார நிறுவனம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
இப்போது, மோடியின் PM Cares பெயரில், ஒரு பேரழிவுக்கு மத்தியில், அரசாங்கத்தின் மூலமாகவே கூச்சமில்லாமல் அப்படியான தவறுகள் நடக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
‘மோடியின் இந்தத் திட்டம் என்பது முழுக்க முழுக்க கொரோனா எதிர்ப்புக்கானது. தனித்துவமானது. இந்த நிதியை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. ஆனால், நேருவின் நிவாரண நிதி திட்டம் அனைத்து பேரிடர்களுக்குமானது. எனவே, தனித்துவமான இந்த நிதி சரியாக செலவழிக்கப்படும்’ என்கிறார்கள் இந்துத்துவர்கள்.
நேரு கொண்டு வந்த பிரதமர் நிவாரண நிதி அனைத்து பேரிடர்களுக்குமானது என்பது உண்மை. பேரிடர் மட்டுமல்ல, இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, ஆசிட் வீச்சு போன்றவற்றுக்காகக் கூட நேருவின் பிரதமர் நிவாரண நிதியைப் பயன்படுத்தலாம். ஆனால், மோடி அறிவித்திருக்கும் PM Cares தன்னுடைய நோக்கமாக, ‘Health emergency or any other kind of emergency’ என்கிறது. இந்த ‘Any’, ‘Other’, ‘Kind’ மூன்று வார்த்தைகளுமே குழப்பமானவை. சொல்லப்போனால் நேர்மையற்றவை; வெளிப்படைத்தன்மையற்றவை; எப்படி வேண்டுமானாலும் திரித்துக்கொள்ளப்படக்கூடிய அபாயமுள்ளவை. Simply, Non- Specified words.
‘இந்தியாவின் எந்த ஒரு Consolidated Fund-யும்’ நிர்வகிக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. ஆனால், மோடியின் PM Cares – நிதியை பயன்படுத்த அப்படி அனுமதி தேவையில்லை. எனவே, இதுபோன்ற அவசர காலத்தில் ‘சிக்கல்’ இல்லாமல் உடனடியாக பணம் வழங்கலாம் – அதற்காக திடீரென PM Cares உருவாக்கப்பட்டது’ என்கிறார்கள் முட்டுக்கொடுப்பாளர்கள்.
தவறு
நேரு கொண்டு வந்த PM Relief Fund நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டதல்ல. நேருவால் உருவாக்கப்பட்டது. PM relief Fund நேரடியாக பிரதமரின் வழிகாட்டுதல் படி இயங்கக்கூடியது. பிரதமரின் Joint – Secretary தான், பிரதமர் நிவாரண நிதிக்குச் செயலாளர். அவர் மூலமாகத்தான் நிதி ஒதுக்கீடு நடக்கும். எனவே, நேரு கொண்டு வந்த திட்டத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்பது பொய்.
எனில், முறையான கணக்கு வழக்குகளும், பாரம்பரியமும் கொண்ட பிரதமர் நிவாரண நிதியை புறந்தள்ளி, புதிய திட்டம் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
சரி. Health Emergency-க்கான சிறப்பு நிதி என்றே வைத்துக்கொள்வோம். அந்த Healthக்கு ஆதாரம் என்ன? மருத்துவமனைகள்.
நேருவின் பிரதமர் நிவாரண நிதியோடு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய – மாநில அரசு மருத்துவமனைகளும், நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஆனால், மோடியின் Health emergency’க்கான ‘Special’ PM Caresஇல் ஏதாவது மருத்துவமனை இணைக்கப்பட்டுள்ளதா?
கிடையாது.
சரி. ஏற்கனவே, நேருவின் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை, மோடியின் திட்டம் அங்கீரித்து நிதி வழங்குமா?
தெரியாது.
ஒரு மருத்துவப் பேரழிவு நேரத்தில், மருத்துவமனைகளைப் பற்றி சிந்திக்கும் இந்த அடிப்படை அம்சத்தைக்கூட செய்யாமல் பிறகு என்ன தனித்துவமான சுகாதார நிதி திரட்டல்?
பணமதிப்பிழப்பு குறித்த தன்னுடைய நாடாளுமன்ற உரையில், முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்திய ‘Organized Loot, Legalised Plunder’ என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
