ஒரே நாளில் மிக அதிகமாக 38, 902 பேருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஜூலை 16ஆம் தேதி இந்தியாவில் 10 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு. இந்நிலையில் அடுத்த மூன்று தினங்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு, 11 லட்சத்தை நெருங்கியிருக்கிறது.

ADVERTISEMENT

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (ஜூலை 19) புதிய உச்சமாக 38,902 பேருக்கு நாடு முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 10,77,618 ஆக அதிகரித்துள்ளது. இதில் இதுவரை 6,77,423 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 543 பேர் உட்பட 26,816 பேர் உயிரிழந்துள்ளனர். 3,73,379 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜூலை 18 வரை 1,37,91,869 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் 3,58,127 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, காசநோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பிசிஜி தடுப்பூசியால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியுமா என்றும் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் வசிக்கும் வயதான நபர்களிடையே நோய் பாதிப்பு மற்றும் இறப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

உலக அளவில் 14 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

**-கவிபிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share