புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேர்காணல் ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என விளக்கமளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது,
விஜய் தேவர கொண்டாவுடன் நான் நடித்த ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படம் வெற்றி பெறாதது தனக்கு வருத்தத்தை அளிப்பதாகவும், அதே தெலுங்கில் நல்ல கதை அமைந்தால் நடிக்க தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும் புஷ்பா படத்தில், ராஷ்மிகா நடித்திருந்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும்,
இந்த காதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக நடித்திருப்பேன் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு ரஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று(மே17) அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “அன்பிற்குரிய நண்பர்களே… நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்பிற்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதரவிற்கும் முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
என் மீதும், என் பணியின் மீதும், அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்தத் தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும், பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
அண்மையில் நேர்காணலின் போது என்னிடம் தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கையில் எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன்.
உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை சொல்லவில்லை.
இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் உண்டு என்பதையும், திரையுலகை சார்ந்த சக நடிகர்கள், நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கர்நாடக வெற்றி: காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்
விஷச்சாராய மரணம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்

