ஒப்பந்த செவிலியர்கள்: விஜயபாஸ்கருக்கு அமைச்சர் மா.சு பதில்!

Published On:

| By Kalai

ma subramaniyan vijayabaskar

ஒப்பந்த செவிலியர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படாமல், இடஒதுக்கீடு விதிமுறை கடைபிடிக்கப்படாத சூழ்நிலையில் பணிநிரந்தரம் எப்படி கோர முடியும்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கால நெருக்கடியை சமாளிப்பதற்காக 2300 தற்காலிக செவிலியர்கள் தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர்.

இவர்களது பணிக்காலம் கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பணி நீட்டிப்பு கிடையாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

Contract nurses Minister Ma subramaniyan reply to Vijayabaskar

இதன் காரணமாக கூடுதல் ஊதியத்துடன் ஒப்பந்த செவிலியர்கள் வேறு பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இன்று(ஜனவரி 5) வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை நேரில் சென்று சந்தித்தார்.

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை அர்பணித்து பணியாற்றிய செவிலியர்களை இந்த அரசு உடனடியான பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Contract nurses Minister Ma subramaniyan reply to Vijayabaskar

ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமீறல் எதுவும் இல்லை என தெரிவித்த விஜயபாஸ்கர், 9ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி அமர்த்த கோரி அதிமுக தரப்பில் குரல் எழுப்பப்படும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த செவிலியர்கள் அனைவரும் கடந்த ஆட்சியின் போது அவசரகால தேவைக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள்.

அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாத நிலையிலும் முதலமைச்சர் அறிவுரைப்படி, யாரையும் பணி நீக்கம் செய்யாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

போராடுவது அவர்களின் ஜனநாயக உரிமை. அதேநேரம் உண்மை நிலையை அறிந்து போராட வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நர்சுகளின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை.

இடஒதுக்கீடு விதிமுறை எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பணிநிரந்தரம் எப்படி கோர முடியும் என்று கூறினார்.

கலை.ரா

கணிதம் கட்டாயம் : ரிஷி சுனக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு !

விதிமீறலால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா?: நடிகர் கிஷோர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share