சோனியா காந்தியின் தாயார் மரணம்!

Published On:

| By christopher

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பவுலா மைய்னோ கடந்த 27ம் தேதி இத்தாலியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இத்தாலி நாட்டில் பிறந்தவர்.

ADVERTISEMENT

இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை திருமணம் செய்ததன் மூலம் நேரு-காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார்.

பின்னர் இந்திய குடியுரிமை பெற்ற இவர், தனது கணவரின் படுகொலை நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து 1998ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அதுமுதல் அவர் முழுநேர அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

ADVERTISEMENT

சோனியா காந்தியின் குடும்பத்தினர் இத்தாலியில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். அவரது தந்தை கடந்த 1983ம் ஆண்டு மறைந்த நிலையில் அவரது தாயார் பவுலா மைய்னோ கடந்த 27ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல் நேற்று அங்கு கத்தோலிக்க முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஆகஸ்டு 31) டிவிட்டரில் தெரிவித்தார்.

இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 24ம் தேதி வெளிநாடு சென்றதாக கூறப்பட்டது.

மேலும், அவர் இந்தியா திரும்பும் முன் இத்தாலியில் உடல் நலம் சரியில்லாத அவரது தாயாரை சந்தித்துவிட்டு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவரது தாயார் பவுலாவின் மரணம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ராகுலுடன் வெளிநாடு செல்லும் சோனியா காந்தி: ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share