ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குவது தொடர்பான சர்ச்சையில் விஜய்க்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் நாளை ஜனவரி 9-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு இன்னமும் சான்றிதழ் வழங்கவில்லை.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க இருக்கிறது. இதனால் ஜனநாயகன் திரைப்பட வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை பேசும் திரைப்படங்களை மக்கள் ஆதரிக்காத போதும் மோடி- அமித்ஷா அரசு அனுசரணையாக இருக்கிறது. இப்போது திரைப்படத்துறையை குறி வைத்துள்ளனர்.
அரசியல் சாசனத்தின் 19(1) (a) கருத்து சுதந்திரத்தை வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு அச்சத்தை உருவாக்கி திட்டமிட்டே கருத்து சுதந்திரத்தை சிதைக்கிறது.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் இப்போது சென்சார் போர்டும் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்தப்படுகிறது. சினிமா துறையை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் போர்டு மாற்றப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடியவை; ஆனால் பண்பாடு என்ற பெயரில் பாஜக-ஆர்எஸ்எஸ் பிரசாரத்தை திணிக்கின்றனர்.
திரைப்படங்களுக்கு அரசியல் ரீதியாக அனுமதி தேவை இல்லை; அரசியல் சாசனத்தின் பாதுகாப்புதான் அவசியம். ’கலையை’ அதிகாரத்தின் முன் மண்டியிட வைத்தால் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்காது. இவ்வாறு மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
