congress leader post Karthi Chidambaram Root Clear
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்த்தி சிதம்பரம் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று (டிசம்பர் 24) கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் விழாவில் இதற்கு வலு சேர்க்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னையில் 109 ஆவது வார்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினரான சுகன்யா செல்வம் முன்னிலையில், காங்கிரஸ் நிர்வாகி கராத்தே செல்வம் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்துகொண்டு கேக் வெட்டினார். பின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான அழகிரி சென்னையில் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இரண்டு, மூன்று நாட்களாக டெல்லியிலேயே இருக்கும் நிலையில்… கார்த்தி சிதம்பரம் இந்த கிறிஸ்துமஸ் விழாவில் உற்சாகமாக கலந்துகொண்டார்.
நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்ட பெண்களிடம், ‘எனக்கும் சேர்த்து ஜெபம் செய்யுங்க’ என்று கார்த்தி சிதம்பரம் சிரித்தபடியே வேண்டுகோள் வைக்க, அவர்களும் நிச்சயமாக என்று உறுதியளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்ட்டிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் மாற்றப்பட்டு அதே கர்நாடகாவைச் சேர்ந்த அஜோய் குமார் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட கார்த்தியின் ஆதரவாளர்கள் அருள் பெத்தையா, விஜய் இளஞ்செழியன் உள்ளிட்டோர் இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தனர்.
“ஏற்கனவே மாநில தலைவரை மாற்ற கோரிக்கை வைத்தபோது மாநில பொறுப்பாளர் மாற்றப்படட்டும். அதன் பிறகு பார்க்கலாம் என்ற பதில் வந்தது. காங்கிரஸ் கட்சியில் மாநில மேலிட பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டால் அடுத்து மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்பது மரபு.
அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து புதிய தலைவரும் நியமிக்கப்படுவார்.
அதுமட்டுமல்ல… தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் செல்லகுமார் எம்பி வட கிழக்கு மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு இல்லையேல் மாநில தலைவர் பதவியை மாணிக் தாகூருக்கு கொடுக்குமாறு கே.எஸ்.அழகிரி டெல்லியில் பேசிவந்தார்.
இந்த பின்னணியில் மாணிக் தாகூர் ஆந்திரா, அந்தமான் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு இல்லை.
நேற்றைய கிறிஸ்துமஸ் விழாவில் கூட, ‘இன்சார்ஜ் மாத்தியாச்சுல்ல… இன்னும் கொஞ்சம் பொறுங்க. எல்லாம் நல்லாவே நடக்கும்’ என்றே கார்த்தி சிதம்பரம் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் நியமிக்கப்படுவது பற்றி மின்னம்பலத்தில், ‘தமிழ்நாட்டுக்கும் ஒரு ரேவந்த் ரெட்டி… கார்த்தி சிதம்பரத்துக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ். ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ரூட் கிட்டத்தட்ட க்ளியர் ஆகிவிட்டது” என்கிறார்கள் கார்த்தி வட்டாரங்களில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் வருமா?
மீண்டும் கொரோனா: தடுப்பூசி தேவையா? மத்திய அரசு விளக்கம்!
congress leader post Karthi Chidambaram Root Clear