மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலால் படம் வெளியாவதில் காலதாமதம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜயின் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள்.
உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், நான் மீண்டும் மீண்டும் சொல்கிறன், திமுக-காங்கிரஸ் கூட்டணி புதிய கூட்டணி கிடையாது. இந்திய அளவில் இந்த கூட்டணி உள்ளது. தமிழகத்திலும் உள்ளது. காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி அதிகாரப்பூர்வமாக திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
எங்கள் கட்சியில் உள்ள பலர் பலரிடம் பேசலாம்.. நான் கூட அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரிடையே பேசுவேன்.
தவெகவுடன் பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரவீன் சக்கரவர்த்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்த பிரதிநிதி கிடையாது. அவர் சென்று பேசினால் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
