சேரி மொழி என்று பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி மாநில தலைவர் ரஞ்சன் குமார் இன்று (நவம்பர் 23) தெரிவித்துள்ளார். congress announces protest against Kushboo
நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்காதது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது. இதற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதற்கு ’மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போது நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்காத குஷ்பூ, த்ரிஷாவுக்காக மட்டும் குரல் கொடுப்பதாகக் கூறி திமுக ஆதரவாளர் சண்முகம் சின்னராஜ் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார்.
அவருக்கு பதிலளித்த குஷ்பூ, “சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
சேரி மொழி என்று குஷ்பு குறிப்பிட்டதற்கு நீலம் பண்பாட்டு மையம், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
How funny to see an outrage from a bunch of selective crowd over my language in my tweet. The same are mute spectators to an outrage of women modesty. Would like to educate the educated illiterates a little about it. My tweet is laced with sarcasm. 'Cheri' is a word in French… pic.twitter.com/xVifEuTuz8
— KhushbuSundar (@khushsundar) November 22, 2023
இந்தநிலையில் சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் என்று பொருள் என குஷ்பூ விளக்கம் கொடுத்திருந்தார்.
சேரி மொழி என்று குஷ்பு பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பூ அவமதித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார் குஷ்பூ.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்புத்துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று நினைக்கிறாரா குஷ்பூ. நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்ட போது இந்த குஷ்பூ, எங்கே போயிருந்தார்? பாஜகவின் கே.டி.ராகவன் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசிய போது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? பாஜகவில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்?

குஷ்பூவுக்கு மகளிர் நலன் மீது எல்லாம் சிறிதளவும் அக்கறை கிடையாது. தன் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பது தான் குஷ்பூவின் நோக்கம். சேரி மக்களிடம் ஒட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதை தான் பயன்படுத்தினாராம். congress announces protest against Kushboo
திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்த குஷ்பு, சேரி மொழி என்று அப்பட்டமாக திட்டினார். அதோடு முதல்வரை சுற்றி இதுபோன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இது தான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா? யாரை ஏமாற்ற குஷ்பூ கபட நாடகமாடுகிறார்? இப்போது கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை.
சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பூவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? குஷ்பூவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டு போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
