மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு, இந்தி மொழித் தேர்வை கட்டாயமாக்கி இருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிக்கையை கடந்த 17ஆம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்.ஐ.டி நிறுவனங்கள் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி. நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு இது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு, இந்தி மொழித் தேர்வை கட்டாயமாக்கி இருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (ஆகஸ்ட் 23) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்குத் தேசிய தேர்வு முகமை (NTA) இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும்.
பன்முகத்தன்மையை அப்பட்டமாக அவமதிப்பதாகும். இவ்வாறு இந்தியைத் திணிப்பது தமிழ்நாடு உள்ளிட்ட பிற இந்தி பேசாத மாநில இளைஞர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக உள்ளது. நியாயமற்ற இந்தி மொழித் தேர்வை ரத்து செய்து அனைவருக்குமான தேர்வாக இதனை மாற்ற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
