டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் கரூர் கம்பெனி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் அளிப்பதற்கு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து இந்த கூட்டு நடவடிக்கை குழுவில் இடம் பெற்றுள்ளவரும் சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளருமான திருச்செல்வன் ஜனவரி 2 ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில்…
“தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கரூர் கம்பெனி என்ற பெயரில் துறை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கமிஷன் கேட்டு ஊழியர்களை மிரட்டி வருகிறார்கள்.
38 டாஸ்மாக் நிர்வாக மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு கும்பல் நியமிக்கப்பட்டு டாஸ்மாக் அதிகாரிகளின் துணையுடன் கடைகளின் விற்பனை விவரங்களை சேகரித்துக் கொண்டு ஊழியர்களை நேரிலும் அலைபேசியிலும் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்கள்.
இதற்கு உடன்படாத ஊழியர்களை அதிகாரிகளின் துணையுடன் கடை ஆய்வு, கடையை மூடுதல், பணியிட மாறுதல் உள்ளிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய நபர்கள் குறித்து புகார் தெரிவிக்கும் ஊழியர்களை பாதுகாப்பதற்கு மாறாக டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த கும்பல் உரிமம் இல்லாமல் மது கூடங்களை நடத்துவதால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற மதுக்கடை உரிமைதாரர்களிடம் கமிஷன் கேட்பது, ஒத்து வராத மதுக்கூடம் உள்ள கடைகளை மூடுவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கடையை திறப்பதற்கும் மூடுவதற்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ள நிலையில்,
அரசுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு சம்பந்தம் இல்லாத வெளி நபர்கள் அதிகாரத்தை செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. போட்டி நிர்வாகத்தை நடத்தும் அளவுக்கு துணிவு பெற்றுள்ளார்கள்.
பல மாவட்டங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் இந்த கும்பலுக்கு அடிபணிந்து ஊழியர் கூட்டங்களை நடத்தி கமிஷன் கொடுக்கும்படி ஊழியர்களை நிர்பந்தம் செய்து வருகிறார்கள்.
இதனால் டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு ஊழியர்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த கும்பலால் டாஸ்மாக் கடைகளில் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக காவல்துறை தலையிட்டு கரூர் கம்பெனி என்ற பெயரில் செயல்படும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும்,
இந்த கும்பலை இயக்கும் நபர்களை கண்டறிய வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வரும் ஜனவரி 10ஆம் தேதி சென்னை காவல்துறை தலைமை இயக்குனரிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
–வேந்தன்
“அதிமுகவை சீண்ட வேண்டாம்” : அன்புமணிக்கு ஜெயக்குமார் காட்டமான பதில்!
சுருட்டிய பணம் எங்கே? மிரட்டிய மாஜி அமைச்சர் குடும்பத்தினர் மீது வழக்கு!
