நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 1) ஆஜரானார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது
இச்சூழலில் தான் சீமான் மீது கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி மீண்டும் புகார் அளித்தார் விஜயலட்சுமி . பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமானை கைது செய்யும் வரை ஓயமாட்டேன் என்றார்.
இந்நிலையில் விஜயலட்சுமியிடம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து நேற்று (ஆகஸ்ட் 31) 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.
அப்போது விஜயலட்சுமி சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் விஜயலட்சுமி இன்று (செப்டம்பர் 1) திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜரானார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில்,“விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்காகும்.
இது தொடர்பாக விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருப்பதை தொடர்ந்து அவரிடம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புகார் அளித்திருப்பதால் திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை நடத்துவோம். விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு சீமானிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்” என்று போலீசார் தெரிவித்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
Comments are closed.