நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும் இழிவுபடுத்தி பேசியுள்ளதாக கோவை மாநகர இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசும்போது பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்?
கஞ்சா, கொக்கைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கிடக்கிறார்களா? என அருவருக்கத்தக்க வகையில் மிகவும் மோசமாக பேசி உள்ளார். இதுபோன்று பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.
எனவே, சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
