உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் தகவல் தொடர்புக்கு பெரிதும் பயன்படுத்தி வருவது வாட்ஸ்அப் செயலியைத்தான். பல கோடிப் பயனர்கள் இதைப் பயன்படுத்தி வரும் நிலையில், உரையாடல், தகவல் அனுப்புதல் என அனைத்து வகையிலும் இது பயனுள்ளதாக உள்ளது.
இந்த வாட்ஸ்அப் சமீபத்தில் பயனர்களின் பிரைவசியில் தலையிடுவதாகக் கூறிப் பலரும், இதைவிட்டு வெளியேறியபோது, டெலிகிராமின் வசதிகளும், அதன் பயன்பாடும் மக்களைப் பெரிதும் கவர்ந்திழுந்தது.
தற்போது டெலிகிராமை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே பயனர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள பல புதிய அம்சங்களை வாட்ஸ்அப் செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில்,
முதலில் வாட்ஸ்அப் குழுவில் 256 பேர் மட்டுமே இணைக்க முடியும் என்பதிலிருந்து இந்த எண்ணிக்கை 512 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் மேலும் பல மாற்றங்களைச் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மார்க் ஜூகர் பெர்க் இன்று (நவம்பர் 3 ) கூறியதாவது:
”இனி வாட்ஸ்அப் குரூப்பில் 1,024 நபர்களை இணைக்கலாம், 32 நபர்களை வீடியோ காலில் இணைக்கலாம், அதேபோல் 2 ஜிபி வரை டேட்டா பைல்களை அனுப்ப முடியும்” என கூறியுள்ளார்.
மேலும், ”வாட்ஸ்அப் கம்யூனிடி” என்ற ஆப்ஷன் மூலம் மேற்கூறிய புதிய பயன்களை பெறலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்