எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த காமெடி நடிகர் மயில்சாமி, 57 வயதிலேயே அகால மரணம் அடைந்து அனைவரையும் அழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
திரைத்துறையில் ஹீரோ, ஹீரோயின்ஸ், வில்லன்களுக்கு இருப்பது போல் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. பலர் தங்களது தனித்துவமான சிந்திக்க வைக்கக் கூடிய நகைச்சுவை திறன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.
அந்த வகையில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நகைச்சுவை நடிகர் மயில்சாமி. திருப்பதியில் லட்டிற்குப் பதிலாக ஜிலேபி கொடுக்க சந்திரபாபு நாயுடு கூறினார் என்று சொன்னாலே அனைவரும் புரிந்து கொள்வார்கள். இதைக் கூறியது சந்திரபாபு நாயுடு அல்ல, நடிகர் மயில்சாமி தான் என்று.

இப்படி காட்சிகள் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர் இனி காணக் கிடைக்காதவர் ஆகிவிட்டார். 57 வயதில் இவர் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது சோகம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பன்முக ஆளுமை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மயில்சாமி இளம் வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டவர். கல்விக் கூடம் பக்கம் அதிகமாக போகாதவர் என்றாலும்… சமூகத்தின் பிரபலமானவர்கள், விலங்குகள்,பறவைகள், சமூக நிகழ்வுகளை தனது குரல் மூலம் கொண்டு வரக் கூடிய மிமிக்ரி ஆற்றலை இயற்கை மயில்சாமிக்குக் கொடுத்திருந்தது. பற்றாக்குறைக்கு தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். அதனால் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.

சென்னையில் பல்வேறு மேடைகளில் மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். அப்படியே கங்கை அமரனின் லைட் மியூசிக் குழுவில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக சேர்ந்தார். அப்போது அவரது சம்பளம் ஒரு நிகழ்ச்சிக்கு ஆயிரம் ரூபாய்.
ஒரு பலகுரல் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய இவர், சன் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியான “அசத்தப் போவது யாரு” ”மர்ம தேசம்” ”லொள்ளு பா” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து மேடைக் கலைஞராக, நகைச்சுவை நடிகராக எந்த கதாபாத்திரத்தை எடுத்தாலும் மிகச் சிறப்பாக நடித்து முடிக்கும் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தார்.
ஒரு தனி ஸ்டைல்
1984-ல் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் நடித்த ’தாவணி கனவுகள்’ என்ற திரைப்படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக திரைத்துறைக்கு அறிமுகமான மயில்சாமி, 1985-ல் ‘கன்னிராசி’ திரைப்படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். கன்னிராசி, சம்சாரம் அது மின்சாரம் என பல படங்களில் துணை நடிகராக நடித்தார் மயில்சாமி. ஸ்ருதி இசைக்குழுவில் மயில்சாமியின் ஆற்றலைக் கண்ட கமல்ஹாசன் அவரை தனது அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு அழைத்துச் சென்றார்.
அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, கில்லி, நான் அவன் இல்லை பாகம் 1 மற்றும் 2, தூள், தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், காக்கி சட்டை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி வைத்திருந்தவர் நடிகர் மயில்சாமி.
ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி.

இவர் நடிப்பில் இறுதியாகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘உடன்பால்’ திரைப்படம் வெளியானது. அடுத்ததாக இவர் ‘கிளாஸ்மெட்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான டப்பிங் பணிகளைக் கூட மயில்சாமி முடித்துவிட்டார்.
மனித நேயர் மயில்சாமி
சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட மயில்சாமி அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். அதிலும் இவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தவர். மயில்சாமி தனது கழுத்தில் எம்.ஜி.ஆர் படம் கொண்ட பெரிய டாலர் செயினை தான் எப்போதும் அணிந்து கொண்டிருப்பார் என நடிகர் விவேக் ஒரு நிகழ்ச்சியில் அவருடைய நண்பரான மயில்சாமியை பற்றிப் பேசும் போது கூறியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். ரசிகர் என்பதால் எம்ஜிஆருக்கு இருந்த உதவும் குணம் மயில்சாமியிடம் நிறைந்திருந்தது. தனது வீடு அமைந்திருந்த விருகம்பாக்கம் பகுதியில் தொடங்கி யார் உதவி கேட்டாலும் தயங்காமல் தன்னால் முடிந்த அளவுக்கு செய்யும் மனித நேயர் மயில்சாமி. சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் கட்டடத்துக்கு எதிரில் இருக்கும் எம்.ஜி.ஆரின் சிலைக்கு தினமும் தனது செலவில் மாலை வாங்கி போட்டு வந்தார் மயில்சாமி. நடிகர் சிவக்குமார் கேட்டுக்கொண்டதால் இப்போது அப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.
அரசியலும், மனிதநேயமும்
எம்.ஜி.ஆரின் மேல் பாரத்தைப் போட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கினார் மயில்சாமி. தனது வீடு அமைந்த விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அவருக்கு விசில் சின்னம் கிடைத்தது.

மயில்சாமி சாதாரணமாக அந்த ஏரியாவில் நின்றாலே கூட்டம் கூடிவிடும். தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான விசிலை ஊதிக் கொண்டு அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றபோது, பலரும் வியந்தனர். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன மயில்சாமி, டிவி விவாதங்களில் வைப்பது போன்றே தேர்தல் பிரச்சாரத்திலும் கேள்விகளை முன் வைத்தார்.
பெரிய பெரிய ஹீரோக்கள் கூட தேர்தலை பார்த்து பயப்பட்ட நிலையில் காமெடியனாக அறியப்பட்டபோதிலும் நிஜ வாழ்வில் ஹீரோவாக தேர்தல் களத்தில் தைரியமாக இறங்கினார் மயில்சாமி. அந்த தேர்தலில் அவருக்கு 1440 வாக்குகளே கிடைத்தபோதும் மயில்சாமியின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினார்கள்.
தேர்தலில் நின்று லட்சக்கணக்கில் கடனாளியாக மாறினார் மயில்சாமி. ஆனபோதும், அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் அவர் செய்யவில்லை. உதவி வேண்டும் என்ற வார்த்தையை சொன்னாலே போதும், தன்னிடம் இருக்கும் கடைசி ரூபாயை கூட எடுத்துக் கொடுத்து விடும் உன்னத மனிதர்.
கொரோனா காலத்திலும், மழை வெள்ள காலத்தில் படகு மூலமாகவும் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர். தன் கையில் பணம் இல்லையென்றாலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று துடிக்கும் குணம் கொண்டவர் மயில்சாமி.
சாய்பாபா மாதிரி ஒரு நாள் பணக்காரனாக இருப்பார், அடுத்த நாளே ஏழையாகிவிடுவார், அவருடைய இந்த நிலைக்குக் காரணம் அவரேதான் என்று நடிகர் விவேக் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் சுனாமி பாதிக்கப்பட்ட காலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்த இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் எப்போதும் தனது கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியில் இருந்த எம்.ஜி.ஆர். டாலரை கொடுத்து உதவி செய்ய வைத்துக் கொள்ளச் சொன்னவர் மயில்சாமி என்று கூறியிருந்தார் விவேக்.
கனமான உண்மை
தீவிர சிவ பக்தரான மயில்சாமி மாதாமாதம் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று பௌர்ணமி கிரிவலத்தில் கலந்துகொள்வார். நேற்று இரவு சிவராத்திரி என்பதால் கேளம்பாக்கம் சிவன் கோயிலில் இரவு முழுவதும் சிவராத்திரி பூஜையில் பங்கேற்றார். பாடல்கள் பாடினார்.

பூஜைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதால் போரூர் ராமச்சந்திர மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்னும் தொடர வேண்டிய எத்தனையோ நகைச்சுவை காட்சிகளும் அரசியல் பயணங்களும் சமூக சேவைகளும் ஓய்வெடுக்க சென்றுவிட்டது என்று சக நடிகர்களும் ரசிகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவிற்கு அன்பைப் பெற்றவர். திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது கடைசி நிமிடங்களை சிவாலயத்தில் மகிழ்ச்சியாகச் செலவழித்த இவரது எதிர்பாராத மரணம் திரையுலகையே கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது. மயில்சாமி என்னும் மனித நேயசாமியிடம் உதவி பெற்று மகிழ்ந்தவர்களும், அவரது காமெடியால் கவலைகளை மறந்தவர்களும் இப்போது கண்ணீரில்.

மயில்சாமியின் உற்ற நண்பரான விவேக், சொர்க்கத்தில் இருந்து மயில்சாமியை வரவேற்பது போல ஒரு மீம் பரவி வருகிறது. கற்பனையாக இருந்தாலும் கனமான உண்மையே அது.
மோனிஷா