கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது தொடர்பாக பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். Colleges in temple funds Edappadi Palaniswami explain
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 8) கோவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்ட பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசாங்கத்திடம் பணம் இல்லையா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இதுவரை பாஜகவுக்கு டப்பிங் செய்துகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி இப்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாகவே மாறிவிட்டார்” என்று விமர்சித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் ஜூலை 14 ஆம் தேதி கோவை டாடாபாத் சிவானந்தா காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் தான் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
இன்று (ஜூலை 10) விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தைச் சொன்னேன். ஒரே நேரத்தில் 9 கல்லூரிகள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் அறநிலையத் துறையில் இருந்து நிதியை எடுத்து அந்த கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சொன்னார்கள்.
அதற்குதான் நான் சொன்னேன், கல்லூரி அமைப்பது அவசியம்தான். ஆனால் அறநிலையத் துறையில் இருந்து நிதி எடுத்து கல்லூரிகள் அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் முழுவதுமாக கிடைக்காது.
எனவே அறநிலையத் துறை கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதற்கு கண், காது, மூக்கு வைத்து இரண்டு நாட்களாக விவாதம் நடக்கிறது.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது 67 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்தோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். ஆனால் இந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடிந்ததா?” என்று கேள்வி எழுப்பினார். Colleges in temple funds Edappadi Palaniswami explain
