குடித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவர்கள்: டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

Published On:

| By Selvam

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தான் கலந்து கொள்ளும் கல்வி நிகழ்ச்சிகளில், மாணவர்கள் கல்வி கற்க வேண்டும், அதுதான் சிறந்த சொத்து என்று கூறி வருகிறார்.

உயர்கல்வியின் விழுக்காட்டை அதிகரிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறுகிறார். ஆனால் கள நிலவரம் வேறாக இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே,  வடசென்னிமலை முருகன் கோயில்  அடிவாரத்தில் அமைந்துள்ளது  அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி.

முதலில் குறைந்தபட்ச உள் கட்டமைப்புடன்  தற்காலிக கட்டிடத்தில் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்ட 1972ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக இருந்த கே.கே.ஷா அடிக்கல் நாட்டினார்.

1973 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி இக்கல்லூரி கட்டடம் மாணவர்களுக்காக திறக்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளாக இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது.

தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியும் உள்ளது.

college principal demand tasmac shop near college shut

இக்கல்லூரியில் பெரும்பாலும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கல்லூரிக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால்  மாணவர்கள் மது குடித்துவிட்டு கல்லூரிக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“கல்லூரி அமைந்துள்ள  மேற்கு பகுதியில் 1000 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள்  நேரம் கிடைக்கும் போது கேட்டரிங் வொர்க் உள்ளிட்ட  பகுதி நேர வேலைக்கும் செல்கின்றனர்.

அப்படி சம்பாதிக்கும் பணத்தில்  கல்லூரிக்கு வரும்போதே டாஸ்மாக்கிற்கு சென்று குடித்துவிட்டுதான் வருகிறார்கள். 

college principal demand tasmac shop near college shut

இதனால் வகுப்பு நடத்துவதைக் காட்டிலும் இந்த மாணவர்களை கண்காணிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. குடித்துவிட்டு வரும் மாணவர்களின் ஐடி கார்டை வாங்கி வைத்துக் கொண்டு வெளியே அனுப்பிவிடுவோம்.

மாணவர்களிடம் ஐடி கார்டை வாங்கும் வேலையையே  2 பேராசிரியர்கள் பார்க்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் 2 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கல்லூரியில் பணியாற்றும்  சில ஊழியர்கள் கூறுகின்றனர்.

கல்லூரியின் முதல்வர் சித்ரா கடந்த மார்ச் மாதம் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள  புகார் மனுவில், “கல்லூரிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில், மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போதே மது அருந்தி விட்டு வருகின்றனர்.

இதனால் அடிக்கடி மாணவர்களுக்கு இடையே சமூக பிரச்சனை ஏற்படுகிறது. இதனால்  கல்லூரிக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை 10 கி.மீ தொலைவிற்கு மாற்றி அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.”

college principal demand tasmac shop near college shut

கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில், “கல்லூரிக்கு வரக் கூடிய வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.

மாணவர்களை எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் டாஸ்மாக்கிற்கு சென்று மது குடித்துவிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் இரு முறை மனு அளித்திருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

பிரியா

5 நாட்களுக்கு மழை: எங்கெங்கே தெரிஞ்சுக்கங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share