22 பிஞ்சு குழந்தைகளை பலி கொண்ட ColdRif இருமல் மருந்து விவகாரத்தில் சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம், ColdRif இருமல் மருந்து தயாரித்து வந்தது. இந்த இருமல் மருந்தை குடித்த, 22 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீசன் பார்மாவின் Coldrif, Relife, Respifresh TR ஆகிய இருமல் மருந்துகளில் டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் அதிகளவில் கலந்து இருந்தது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில போலீசாரால் ஶ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஶ்ரீசன் பார்மாவின் Coldrif இருமல் மருந்துக்கும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ரங்கநாதன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.
