ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை இன்று (அக்டோபர் 4) வாபஸ் பெற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து பலமுறை வலியுறுத்திய நிலையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் தொடர்ந்து இந்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாத நிலையில் கடந்த மாதம் மாவட்ட நிர்வாகத்துடன் தூய்மை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் கோவை மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை துவங்கினர்.
கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு வரக்கூடிய தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தூய்மை பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
தூய்மை பணியாளர்கள் பணிக்கு வராததால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், நோயாளிகள் அவதிக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டது.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினருடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (அக்டோபர் 4)பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்பு இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாமன்றத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர்.
கலை.ரா
95% முடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ் : பொட்டல்காடாக மதுரை எய்ம்ஸ்!
மதுரவாயல் – துறைமுகம் சாலை 2024ல் திறப்பு : அமைச்சர் எ.வ.வேலு உறுதி!