மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரு பயணிகளின் விமானங்களின் இறக்கைகள் மோதியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்த நிலையில் ஓடுதளத்தை நோக்கி விமானம் புறப்பட்டது.
அதே நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ விமானம் தரை இறங்கி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, இந்த இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று திடீரென மோதின. இதனால் இரு விமானங்களில் இருந்த பயணிகளும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இதனால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இரண்டு விமானங்களில் இருந்தும் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமானங்களின் இறக்கை பகுதிகளில் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டது. ஆனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனையடுத்து கோவை பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இது பற்றிய விசாரணை நடந்து வருகிறது.
