கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில், நெல்லையில் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக 2 பேரை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 45 இடங்களில் இன்று(நவம்பர் 10) காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நெல்லை மாநகர பகுதியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இரு குழுக்களாக சோதனையில் இறங்கி உள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.
ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு அமலாக்கத்துறையினருக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த குழு டவுன் கல்லணை தெருவில் உள்ள சதாம் உசேன் என்பவர் வீட்டில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சதாம் உசேன் நெல்லையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று பெருமாள்புரம் செயின்ட் பால்ஸ் நகரில் ராஜ் குமார் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு இவர்கள் மூலம் பண உதவி செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கலை.ரா
ஆளுநரிடம் காத்திருக்கும் மசோதாக்கள் – கட்டாயப்படுத்த முடியாது : அமைச்சர்!
